தனியார் மருத்துவமனை அலட்சியத்தால் ஆபரேஷன் செய்த வாலிபரின் வயிற்றுக்குள் ஊசிவைத்து தைப்பு

பெரம்பூர்: தனியார் மருத்துவமனையில் அலட்சியத்தால் ஆபரேஷன் செய்யப்பட்ட வாலிபரின் வயிற்றுக்குள் ஊசி வைத்து தைக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அவரது வயிற்றில் இருந்து ஊசி அகற்றப்பட்டது. இதுபற்றி கொடுக்கப்பட்டுள்ள புகாரின்படி, போலீசார் மருத்துவமனை நிர்வாகம் மற்றும் பாதிக்கப்பட்ட வாலிபரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை புளியந்தோப்பு பி.கே.காலனியை சேர்ந்தவர் ரஞ்சித்குமார் (28). இவர் கூலி தொழிலாளி. இவருக்கு மனைவி, ஒரு மகன் உள்ளனர். கடந்த 30ம் தேதி கூலி வேலை செய்தபோது ரஞ்சித்குமாரின் வயிற்றில் காயம் ஏற்பட்டதால் அதற்கு சிகிச்சை பெற பட்டாளம் டிமலஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு வந்துள்ளார்.

அங்கு ரஞ்சித்குமாருக்கு வயிற்றுப்பகுதியில் 13 தையல்கள் போட்டு வீட்டுக்கு அனுப்பிவைத்தனர். 3 நாட்கள் கழித்து மீண்டும் மருத்துவமனைக்கு வரவேண்டும் என்று ஊழியர்கள் கூறியுள்ளனர். இந்த நிலையில், வீட்டுக்கு வந்த ரஞ்சித்குமாருக்கு மறுநாள் அவர் சிகிச்சை பெற்ற மருத்துவமனையில் இருந்து பேசியவர்,  ‘’ நீங்கள் உடனடியாக மருத்துவமனைக்கு வாருங்கள்’ என்று கூறியுள்ளார். இதையடுத்து ரஞ்சித்குமார் அங்கு சென்றபோது தையல் பிரிக்க வேண்டும் என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். அதற்கு ரஞ்சித்குமார், நேற்று தானே தையல்போடப்பட்டது. அதற்குள் பிரிப்பார்களா?’ என்று கேட்டுள்ளார்.

அதற்கு மருத்துவமனை ஊழியர்கள், ‘இரண்டு தையல்கள் மட்டும் பிரிக்கவேண்டும். காயம் எப்படி உள்ளது’’ என்று பார்க்க வேண்டும்’ என்று கூறியுள்ளனர். இதன்பிறகு வயிற்றில் இரண்டு தையல்களை பிரித்து, ஏதாவது குத்துகிறதா என்று கேட்டபோது ஆமாம் என்று ரஞ்சித்குமார் கூறியுள்ளார். இதையடுத்து அதே பகுதியில் உள்ள ஸ்கேன் சென்டரில் ஸ்கேன் எடுத்தபோது ரஞ்சித்குமார் வயிற்றில் சிறிய அளவிலான ஊசி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த ரஞ்சித்குமார், மருத்துவமனை நிர்வாகத்திடம்  கேட்டபோது அவர்கள், ‘’மீண்டும் ஆபரேஷன் செய்து ஊசியை அப்புறப்படுத்திவிடலாம்.

இதை யாரிடமும் சொல்லாதீர்கள், பணம் தருகிறோம்’ என்று கூறியதாக தெரிகிறது. ஆனால் இதை ஏற்க மறுத்த ரஞ்சித்குமார் உடனடியாக ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு நேற்றிரவு அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் வயிற்றில் இருந்த ஊசி அகற்றப்பட்டது. இதுகுறித்து ரஞ்சித்குமார் கொடுத்துள்ள புகாரின்படி, புளியந்தோப்பு போலீசார் ரஞ்சித்குமாரிடமும் மருத்துவமனை நிர்வாகத்திடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: