கலெக்டர் ஆபீசில் ஆர்ப்பாட்டம்: வீடு கட்டித்தர கோரிக்கை

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை வட்டம், ஆத்துப்பாக்கம் ஊராட்சி அரியபாக்கம் ஆதிதிராவிடர் புதிய காலனியை சேர்ந்த மக்கள், விசிக மாநில செயலாளர் நீலவானத்து நிலவன் தலைமையில், கலெக்டர் அலுவலகத்தில் போராட்டம் நடத்தினர். இதன் பின்னர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸிடம் அவர்கள் கொடுத்த மனு; ஊத்துக்கோட்டை வட்டம், பெரியபாளையம் பவானி அம்மன் கோயிலுக்கு எதிரில் ஆரணி ஆற்று புறம்போக்கு நிலத்தில் 35 ஆதிதிராவிட குடும்பத்தினர் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக குடிசை போட்டு வசித்து வந்தோம். கடந்த 2006ம் ஆண்டு அந்த இடத்தில் இருந்து எங்களை அப்புறப்படுத்திவிட்டு மாற்றிடம் ஒதுக்கீடு செய்யப்பட்டு தனித்தனியாக 35 குடும்பங்களுக்கும் வீட்டுமனை கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு வழங்கப்பட்டது.

அங்கு குடிசை அமைத்து வசித்து வருகின்றனர். இதனால் எங்களுக்கு வீட்டுமனை வழங்கி மத்திய அரசின் தொகுப்பு வீடு அல்லது மாநில அரசின் பசுமை வீடு திட்டங்களில் வீடு கட்டித்தர வேண்டும். இதுகுறித்து ஊத்துக்கோட்டை வட்டாட்சியர், திருவள்ளூர் கோட்டாட்சியர் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரிடம் பலமுறை மனு அளித்ததுடன் போராடி வருகின்றோம். இதுவரை வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கவில்லை. எங்களது மனு மீது உரிய விசாரணை நடத்தி உடனடியாக வீட்டுமனைப்பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

‘‘உரிய நடவடிக்கை எடுத்து விரைவில் 35 குடும்பத்துக்கும் வீட்டுமனை பட்டா வழங்கப்படும்’’ கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் உறுதி அளித்தார். அப்போது ஜி.டி.வேலுமயில், விசிக மாவட்ட பொருளாளர் தண்டலம் தமிழ்ச்செல்வன், ஒன்றிய செயலாளர் அறிவுச்செல்வன், மாவட்ட துணை அமைப்பாளர் கவியரசு, ஒன்றிய பொருளாளர் தென்னரசு, ஒன்றிய துணைச் செயலாளர் தங்கராசு, பிரசாத் உள்பட பலர் இருந்தனர்.

Related Stories: