லக்னோ: உ.பி-யில் ரூ9,600 கோடி மதிப்பில் எய்ம்ஸ் மருத்துவமனை உட்பட பல்வேறு திட்டங்களை பிரதமர் மோடி இன்று பிற்பகல் திறந்து வைக்கிறார். உத்தர பிரதேச மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மீண்டும் ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்வதற்காக ஆளும் பாஜக புதிய வியூகங்களை வகுத்து வருகிறது. தேர்தல் அறிவிப்புக்கு முன்னதாக பிரமாண்ட யாத்திரைகளை நடத்த பாஜக முடிவு செய்துள்ளது. உத்தர பிரதேச சட்டசபை தேர்தலில் வெற்றி வாய்ப்பு குறித்தும், அதிக இடங்களைக் கைப்பற்றுவது குறித்தும் லக்னோவில் நடந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
இந்நிலையில், உத்தர பிரதேசம் மாநிலம் கோரக்பூரில் கட்டப்பட்டுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையை பிரதமர் மோடி இன்று பிற்பகல் திறந்து வைக்கிறார். மேலும், உத்தரபிரதேச மாநிலத்திற்காக உரத் தொழிற்சாலை உட்பட ரூ.9,600 கோடி மதிப்பிலான தேசிய வளர்ச்சித்திட்ட பணிகளையும் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். கோரக்பூர் எய்ம்ஸ் மருத்துவமனையானது ரூ.1,011 கோடி மதிப்பில் 112 ஏக்கரில் கட்டப்பட்டுள்ளது. இம்மருத்துவமனையில் 300 படுக்கைகள் கொண்ட வசதிகள் உள்ளன. பீகார், ஜார்கண்ட், நேபாளத்தைச் சேர்ந்த நோயாளிகள் இம்மருத்துவமனையில் மூலம் பயனடைய முடியும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.