தாதா சாகேப் பால்கே விருது பெற்றதற்காக நடிகர் ரஜினிகாந்துக்கு சசிகலா நேரில் வாழ்த்து!: உடல்நலம் குறித்தும் விசாரித்தார்..!!

சென்னை: நடிகர் ரஜினிகாந்துடன் சசிகலா நேரடியாக சந்தித்து பேசியுள்ளார். சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினியின் இல்லத்தில் சந்தித்து அவருடைய உடல்நலம் குறித்து கேட்டறிந்ததோடு மட்டுமின்றி, தாதா சாகேப் பால்கே விருது பெற்றதற்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களையும் சசிகலா தெரிவித்துள்ளார். பரபரப்பான அரசியல் சூழலில் இந்த சந்திப்பானது மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது. இது தொடர்பான புகைப்படம் வெளியிடப்பட்டு அதற்கான அறிக்கையும் சசிகலா சார்பாக வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த சந்திப்பானது போயஸ் கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்த் இல்லத்தில் நேற்று மாலை நடைபெற்றிருப்பதாகவும் அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

ரஜினி உடனான இந்த சந்திப்பின் போது ரஜினியின் மனைவி லதா ரஜினிகாந்தும் உடன் இருந்தார். ரஜினிகாந்த் அண்மையில் உடல்நலம் பாதிக்கப்பட்டு தற்போது முற்றிலுமாக குணமடைந்துள்ளதை அறிந்தே நேரில் சென்று சந்தித்து அவருடைய உடல்நலத்தை பற்றி கேட்டறிந்ததாக சசிகலா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும் ரஜினிகாந்த் அவர்கள் கலை உலகின் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது பெற்றதற்கும் தனது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொண்டதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

அதிமுக உட்கட்சித் தேர்தல் தொடர்பாக சில நாட்களுக்கு முன்பு பரபரப்பான அறிக்கை வெளிட்ட சசிகலா, யாரும் எதிர்பாராத வகையில் ரஜினிகாந்த் இல்லம் சென்று அவரை சந்தித்துப் பேசியுள்ளார். கோயில் தரிசனம், தொண்டர்களிடம் பேசுதல், பொது நிகழ்ச்சிகள், கனமழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு நிவாரண உதவி வழங்குதல், அறிக்கை வெளியிடுதல் என்று சசிகலா தொடர்ந்து அரசியல் நடவடிக்கைகளில் கவனம் செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Related Stories: