தென்காசி மக்களே ரெடியா..! வரும் 20ம் தேதி முதல் நேர கட்டுப்பாடுகளுடன் குற்றால அருவிகளில் குளிக்க அனுமதி

தென்காசி: குற்றால அருவிகளில் டிசம்பர் 20ஆம் தேதி முதல் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று தென்காசி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து தென்காசி மாவட்டஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில்;

* சுற்றுலாத் தலத்திற்கு வருகை தரும் பொது மக்களின் சுகாதாரமும், பாதுகாப்புமே முதன்மையானது.

* பாதுகாப்பான, கிருமிநீக்கம் செய்யப்பட்ட, சுத்தமான சுற்றுப்புறம் பொது மக்களுக்கும், பணியாளர்களுக்கும் தயார் செய்யப்பட வேண்டும்.

* குறைந்தபட்சம் இரண்டு மீட்டர் இடைவெளியில் சுற்றுலா பயணிகள் நிறுத்தப்பட வேண்டும். இடைவெளியுடன் நிற்பதற்கு தேவையான இடங்களில் குறியீடு செய்யப்பட வேண்டும்.

* காய்ச்சல் கண்டறியும் கருவியை (Thermal Scanner) பொதுமக்களுக்கும், பணியாளர்களுக்கும் தவறாது காய்ச்சலுக்கான சோதனை நடத்தப்பட வேண்டும்.

* தனி மனித இடைவெளி கடைபிடிக்கப்பட வேண்டும். பணியாளர்களுக்கு முகக்கவசம், கையுறைகள், வழங்க வேண்டும்.

^ பேரருவி: ஒரு நேரத்தில் 10 ஆண்கள் மற்றும் 6 பெண்கள்

^ ஐந்தருவி: ஒரு நேரத்தில் 10 ஆண்கள் மற்றும் 10 பெண்கள்

^ பழைய குற்றாலம்: ஒரு நேரத்தில் 5 ஆண்கள் மற்றும் 10 பெண்கள்

* காலை 6.00 மணி முதல் மாலை 6.00 வரை கூட்ட நெரிசல்களை தடுக்க குறிப்பிட்ட மணிநேரத்திற்கு மேற்படி குறிப்பிட்ட எண்ணிக்கையிலேயே பொதுமக்கள் அனுமதிக்கப்பட வேண்டும்.

* நோய் கட்டுப்பாட்டுப் பகுதியில் (Containment Zone) இருந்து சுற்றுலா பயணிகள் அருவிகளுக்கு வருகை தவிர்க்க வேண்டும்.

* போதுமான கிருமி நாசினிகள் இருப்பு வைத்திருக்க வேண்டும்.

* கொரோனா தொற்று தடுப்பு நடைமுறைகள், சுற்றுலா தலத்திற்கான நிலையான இயக்க நடைமுறைகள் குறித்து தேவையான இடங்களில் பதாகைகள் நிறுத்தியும், சுவரொட்டிகள் ஒட்டியும், சுற்றுலா பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும்.

* தொற்று சந்தேகம் உள்ள சுற்றுலாப் பயணிகளை தற்காலிகமாக தனிமைப்படுத்த வசதிகள் செய்யப்பட வேண்டும்.

* CCTV கேமரா மூலம் பயணிகள் வருகை கண்காணிக்கப்பட வேண்டும்.

* பேரூராட்சி செயல் அலுவலர்கள் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆகியோர் அருவி அருகில் அமைந்துள்ள கடைகளில் தவறாமல் அரசினால் தெரிவிக்கப்பட்ட நிலையான இயக்க நடைமுறைகளை பின்பற்றபடுவதை உறுதி செய்ய வேண்டும்.

* தென்காசி கோட்டாட்சித்தலைவர் குற்றால அருவிக்கு வரும் பொதுமக்கள் தங்கும் இடங்களான சிறிய / பெரிய விடுதிகள், உணவகங்கள், மற்றும் அருவிப்பகுதியில் அமைந்துள்ள கடை உரிமையாளர்களை அழைத்து அரசினால் தெரிவிக்கப்பட்ட நிலையான இயக்க நடைமுறைகள் பின்பற்ற வேண்டிய அவசியத்தை தெளிவுபடுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Related Stories: