தமிழக மழை, வெள்ள பாதிப்புகள் குறித்து விவாதிக்க மறுப்பது ஏன்?: இது மிக மிக ஆபத்தான விவகாரம் என மக்களவையில் டி.ஆர்.பாலு ஆவேசம்..!!

டெல்லி: தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள மழை, வெள்ள பாதிப்புகள் குறித்து விவாதிக்க மறுப்பது ஏன்? என்று மக்களவையில் திமுக எம்.பி. டி.ஆர்.பாலு கேள்வி எழுப்பினார். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் கேள்வி நேரத்தின் போது பேசிய திமுக எம்.பி. டி.ஆர்.பாலு, தமிழ்நாடு கடந்த சில நாட்களாக மழை, வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என்றார். இன்றைக்கும் கூட தமிழ்நாடு முதலமைச்சர் ஊரக பகுதிகளில் பாதிப்புகளை பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறார். கடந்த 31 நாட்களாக முழங்கால் அளவு தண்ணீரில் நடந்து சென்றே வெள்ள சேதங்களை பார்த்து முதல்வர் நடவடிக்கை எடுத்து வருகிறார்.

இது தொடர்பாக நானும், தயாநிதி மாறனும் கவன ஈர்ப்பு தீர்மான நோட்டீஸ் கொடுத்து விவாதிக்க  வலியுறுத்தி வருகிறோம். ஆனால் அதனை கவனத்தில் கொள்வதில்லை. எப்போதுதான் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ள போகிறீர்கள்? என்று டி.ஆர்.பாலு கேள்வி எழுப்பினார். இது மிக மிக ஆபத்தான விவகாரம். கடந்த 10 நாட்களாக இது தொடர்பாக வலியுறுத்தி வருகிறோம் என்றும் அவர் குறிப்பிட்டார். இதேபோல், சேலம் மற்றும் ஈரோட்டில் இருந்து இயக்கப்பட்ட பயணிகள் ரயிலை மீண்டும் இயக்க வேண்டும் என்று மாநிலங்களவையில் திமுக எம்.பி. கணேசமூர்த்தி வலியுறுத்தியுள்ளார்.

ஈரோட்டில் இருந்து ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் அண்டை மாவட்டங்களுக்கு வேலைக்கு செல்வதால் அவர்களுக்கு சீசன் டிக்கெட் கிடைக்கவும் நடவடிக்கை தேவை என்றார் அவர். தொடர்ந்து ஆம்பூர் மற்றும் வாணியம்பாடியில் உயர்மட்ட பாலம் அமைப்பதற்கான கோரிக்கை நீண்ட நாட்களாக கிடப்பில் இருப்பதாக வேலூர் மக்களவை உறுப்பினர் கதிர் ஆனந்த் வலியுறுத்தியுள்ளார். ஆம்பூர் ரெட்டித்தோப்பில் ரயில்வே மேம்பாலம் இல்லாததால் மழைக்காலத்தில் ஏராளமான பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுவது தொடர்கதையாகி வருகிறது.

Related Stories: