வேளாண் அறிக்கையில் அறிவிக்கப்பட்ட முதலமைச்சரின் ஊட்டம் தரும் காய்கறி தோட்ட திட்டம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சென்னை: வேளாண் அறிக்கையில் அறிவிக்கப்பட்ட முதலமைச்சரின் ஊட்டம் தரும் காய்கறி தோட்டம் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். வேளாண்மை துறைக்கு அதிக முக்கியத்துவம் அளித்திடும் வகையில் தமிழக வரலாற்றில் முதல்முறையாக, விவசாயிகளை அழைத்து, அவர்களது கருத்துகளை கேட்டறிந்து வேளாண்மை துறைக்கென தனி நிதிநிலை அறிக்கை கடந்த ஆகஸ்ட் 14ம்தேதி தாக்கல் செய்யப்பட்டது.இந்நிதிநிலை அறிக்கையில், முதலமைச்சரின் ஊட்டம் தரும் காய்கறி தோட்ட திட்டத்தில் அன்றாட தேவைக்கான நஞ்சில்லா காய்கறிகளை மகளிர், தங்களது இல்லங்களிலேயே உற்பத்தி செய்வதற்கும், குழந்தைகள் தாவரங்களை பற்றி அறிந்து கொள்வதற்கும் 95 கோடி மதிப்பீட்டிலான திட்டங்கள் செயல்படுத்த அறிவிக்கப்பட்டது.

அதன்படி, முதலமைச்சரின் ஊட்டம் தரும் காய்கறி தோட்ட திட்டத்தின் கீழ், 6.75 கோடி செலவில், நகரப்பகுதிகளில் 900 மதிப்புடைய 6 வகையான காய்கறி விதைகள், 6 எண்ணிக்கையிலான செடி வளர்க்கும் பைகள், 6 எண்ணிக்கையிலான 2 கிலோ தென்னை நார்கட்டிகள், 400 கிராம் உயிர் உரங்கள், 200 கிராம் உயிரி கட்டுப்பாட்டு காரணி, 100 மி.லி. இயற்கை பூச்சி கொல்லி மருந்து மற்றும் சாகுபடி முறைகளை விளக்கும் கையேடு ஆகியவை அடங்கிய மாடி தோட்ட தளைகள் 225 என்ற மானிய விலையில், சென்னை தலைமை செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்து பயனாளிகளுக்கு வழங்கினார்.

இத்திட்டத்தின் கீழ் ஒருவருக்கு அதிகபட்சமாக 2 மாடி தோட்ட தளைகள் வரை வழங்கப்படும். அதேபோன்று, ஊரக பகுதிகளில் காய்கறி தோட்டம் அமைப்பதை ஊக்குவிப்பதற்காக, 90 லட்சம் செலவில் 15க்கு கத்திரிக்காய், மிளகாய், வெண்டைக்காய், தக்காளி, அவரை, பீர்க்கன், புடலை, பாகல், சுரைக்காய், கொத்தவரை, சாம்பல்பூசணி, கீரைகள் ஆகிய 12 வகை காய்கறி விதைத் தளைகளை முதல்வர் பயனாளிகளுக்கு வழங்கினார். இக்காய்கறி விதைத்தளையினை 2 தொகுப்புகள் வரை ஒருவர் பெற்று கொள்ளலாம்.

நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த ஊட்டச்சத்து தளைகள் வழங்கும் திட்டத்தின் கீழ், மூலிகை செடிகள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியுடைய பழங்கள் மற்றும் காய்கறிகளை வளர்த்து பயன்பெற, 1.50 கோடி செலவில், 25 ரூபாய்க்கு பப்பாளி, எலுமிச்சை, முருங்கை, கறிவேப்பிலை, திப்பிலி, கற்பூரவல்லி, புதினா மற்றும் சோற்று கற்றாழை ஆகிய 8 செடிகள் அடங்கிய ஊட்டச்சத்து தளைகளை முதல்வர் பயனாளிகளுக்கு வழங்கினார். ஒரு குடும்பத்திற்கு அதிகபட்சமாக ஒரு தொகுப்பு வழங்கப்படும்.இத்திட்டங்களில் பயன்பெற விரும்பும் பொதுமக்கள் https://tnhorticulture.tn.gov.in/kit/ என்ற இணையதள வாயிலாக விண்ணப்பித்து, சத்தான காய்கறிகள், பழங்கள் மற்றும் நோய் எதிர்ப்பு மூலிகைகள் உட்கொள்ளும் வாய்ப்பினையும், ஊக்கம் தரும் பொழுதுபோக்கினையும் ஏற்படுத்தி கொள்ளலாம்.நிகழ்ச்சியில், வேளாண்மை மற்றும் உழவர்நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, வேளாண்மை-உழவர் நலத்துறை செயலாளர் சி.சமயமூர்த்தி, தோட்டக்கலை மற்றும் மலை பயிர்கள் துறை இயக்குநர் ஆர்.பிருந்தா தேவி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து

கொண்டனர்.

கலைஞர் அறக்கட்டளை சார்பில் 8 பேருக்கு மருத்துவம் கல்விக்காக 2 லட்சம்

கலைஞர் அறக்கட்டளைக்காக கலைஞர் தந்த 5 கோடியில் கிடைக்கும் வட்டியில் மாதந்தோறும் ஏழை எளிய நலிந்தோர்க்கு உதவித் தொகையாக 2005 நவம்பர் முதல் 2007 ஜனவரி மாதம் வரை வழங்கப்பட்டு வருகிறது. வைப்பு நிதியாக போடப்பட்ட 5 கோடியில், 1 கோடியை தென்னிந்திய புத்தக விற்பனையாளர்-பதிப்பாளர் சங்கத்துக்கு 2007ல் வழங்கினார். மீதமுள்ள 4 கோடியில் இருந்து கிடைக்கும் வட்டியில் தொடர்ந்து உதவித் தொகை வழங்கப்படுகிறது.

இதுவரை 5 கோடியே 41 லட்சத்து 90 ஆயிரம் உதவி தொகை வழங்கப்பட்டுள்ளது. நவம்பர் மாதம் வட்டியில் மருத்துவம் மற்றும் கல்வி உதவி நிதியாக மொத்தம் 8 பேருக்கு தலா 25 ஆயிரம் வீதம் 2 லட்சத்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று வழங்கினார். நிதி பெறுவோர் வெளி மாவட்டங்களில் இருந்து வந்து போகும் செலவை தவிர்ப்பதற்காக தபால் மூலம் வரைவு காசோலையாக அனுப்பப்படுகிறது. இந்த தகவலை திமுக தலைமை கழகம் தெரிவித்துள்ளது.

Related Stories: