மும்பை: மும்பை
ஜுஹுவின் ஏபி நாயர் சாலையில் பாலிவுட் நடிகர் சோனு சூட்டுக்கு சொந்தமான
ஓட்டல் செயல்பட்டு வந்தது. இந்த ஓட்டல் மாநகராட்சியின் முறையான அனுமதியின்
பேரில் கட்டப்படவில்லை. ஏற்கனவே இந்த ஓட்டல் குடியிருப்பாக இருந்தது.
மாநகராட்சியின் அனுமதியின்றி செயல்பட்ட ஓட்டல் விவகாரம் தொடர்பாக
நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதனால் ஓட்டலை மீண்டும் குடியிருப்பாக
மாற்றிவிடுவதாக சோனு சூட் ஒப்புக் கொண்டார். அதற்காக ஏழு நாட்களுக்குள்
மாநகராட்சியின் திட்டத்தின்படி கட்டிட கட்டமைப்பை மீட்டெடுப்பதாக
உறுதியளித்தார். ஆனால், அதன்படி மீண்டும் குடியிருப்பாக மாற்றுவதற்கான
பணிகளை முடிக்கவில்லை. இவ்விவகாரம் தொடர்பாக சமூக ஆர்வலர் கணேஷ் குஸ்முலு
என்பவர் லோக் ஆயுக்தாவில் புகார் அளித்துள்ளார். அதில், ‘ஓட்டலை
குடியிருப்பாக மாற்றாத சோனு சூட் மீதும் எப்.ஐ.ஆர் பதிவு செய்ய வேண்டும்’
என்று கூறினார். இந்த நிலையில் மும்பை மாநகராட்சி நிர்வாகம் சோனு
சூட்டுக்கு அனுப்பிய புதிய நோட்டீசில், ‘இதுதொடர்பாக முறையான விளக்கம்
அளிக்க வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.