திருவனந்தபுரம்: சபரிமலையில் மண்டல பூஜையை முன்னிட்டு ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் தங்க அங்கி ஊர்வலம் வரும் 22ம் தேதி ஆரன்முளாவில் இருந்து புறப்படுகிறது. தொடர்ந்து 26ம் தேதி பிரசித்தி பெற்ற மண்டல பூஜை நடைபெறுகிறது. சபரிமலை கோயிலில் இவ்வருட மண்டல கால பூஜைகள் கடந்த மாதம் 16ம் தேதி தொடங்கின. இந்தநிலையில் பிரசித்தி பெற்ற மண்டல பூஜை வரும் 26ம் தேதி நடைபெறுகிறது. அப்போது ஐயப்ப விக்ரகத்தில் தங்க அங்கி அணிவிக்கப்படுவது வழக்கம். இந்த தங்க அங்கி பத்தனம்திட்டா மாவட்டம், ஆரன்முளா பார்த்தசாரதி கோயிலில் இருந்து 22ம் தேதி காலையில் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு 25ம் தேதி பம்பையை அடைகிறது. பின்னர் தங்க அங்கி ஐயப்பன் விக்ரகத்தில் அணிவிக்கப்பட்டு தீபாராதனை நடத்தப்படும். மறுநாள் (26ம் தேதி) பிரசித்தி பெற்ற மண்டல பூஜை நடைபெறும். 2 நாட்கள் தங்க அங்கியுடன் காட்சியளிக்கும் ஐயப்பனை காண ஏராளமான பக்தர்கள் சபரிமலை குவிவார்கள்.