கொரோனா கட்டுப்பாடுகள் விதித்து பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்யக் கோரிய மனுதாரருக்கு ரூ.1.50 லட்சம் அபராதம்: ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: கொரோனா கட்டுப்பாடுகள் விதித்து பிறப்பிக்கப்பட்ட அரசாணைகளை ரத்து செய்தும், ஊரடங்கால் ஏற்பட்டுள்ள வருவாய் இழப்புக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கவும் வேண்டும் என கோரியவருக்கு ரூ.1.50 லட்சம் அபராதம் விதித்து ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. மதுரை அண்ணா நகரை சேர்ந்த தவமணி, ஐகோர்ட் மதுரை கிளையில் ஆட்கொணர்வு கோரி தாக்கல் செய்த மனுவில், ‘‘கொரோனா உயிர்க்கொல்லி நோயல்ல. குணப்படுத்தக்கூடிய சாதாரண நோய்தான். சுலபமாக குணப்படுத்தி விடலாம். அதற்காக கட்டுப்பாடுகள் விதிக்க  வேண்டியதில்லை. எனவே, கட்டுப்பாடுகள் விதித்து பிறப்பிக்கப்பட்ட அரசாணைகளை ரத்து செய்தும், ஊரடங்கால் ஏற்பட்டுள்ள வருவாய் இழப்புக்கு ரூ.5 லட்சம்  இழப்பீடு வழங்கவும் உத்தரவிட வேண்டும்’’’’ என்று கூறியிருந்தார்.

இந்த மனுக்களை நேற்று விசாரித்த நீதிபதிகள் வைத்தியநாதன், ஜெயச்சந்திரன் அமர்வு, ‘‘கொரோனா தொற்று பரவலை தடுக்க ஒன்றிய, மாநில அரசுகள் கடும் நடவடிக்கைகள் எடுத்து  வருகின்றன. இந்த நடவடிக்கைகளை மனுதாரர் கண்டித்துள்ளார். மனுதாரரை போன்றவர்களின் செயல்பாடுகள் கொரோனாவால் உயிரிழந்தவர்கள், கொரோனா தடுப்பு  பணியில் ஈடுபட்டு வரும் மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள் மற்றும் பிற பணியாளர்களை அவமானப்படுத்தும் வகையில் உள்ளது. எனவே, மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. மனுதாரருக்கு ரூ.1.50 லட்சம் அபராதம்  விதிக்கப்படுகிறது. இப்பணத்தை அவர் 15 நாட்களில் மதுரை அரசு ராஜாஜி  மருத்துவமனை கொரோனா வார்டுக்கு வழங்க வேண்டும். தவறினால் மனுதாரரிடம்  இருந்து பணத்தை வசூலிக்க மதுரை மாவட்ட கலெக்டர் வருவாய் மீட்பு சட்டப்படி  நடவடிக்கை எடுக்க வேண்டும்’’’’ என உத்தரவிட்டனர்.

Related Stories: