மழை குறைந்து தண்ணீர் மிதமாக கொட்டுகிறது: கவியருவியில் ஒரேநாளில் 2 ஆயிரம் பேர் குவிந்தனர்

ஆனைமலை: வெள்ளப்பெருக்கு குறைந்து கவியருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு நேற்று முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் ஒரேநாளில் 2 ஆயிரம் பேர் குவிந்தனர். கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில், கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்ததால், ஆழியாறு அருகே வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கவியருவியில் அவ்வப்போது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஒருவாரத்திற்கு முன்பு பெய்த கனமழை காரணமாக செம்மண் கலரில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால், சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை குறைவால் கவியருவியில் வெள்ளப்பெருக்கின்றி தண்ணீர் ரம்மியமாக கொட்ட ஆரம்பித்தது. இதையடுத்து, கவியருவிக்கு சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். நேற்று விடுமுறை என்பதால் உள்ளூர் மற்றும் வெளியூர் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்து குளித்து மகிழ்ந்தனர். நேற்று மட்டும் கவியருவிக்கு 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வந்ததாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

Related Stories: