புதுடெல்லி: டெல்லியில் அம்பேத்கர் நினைவு தினத்தையொட்டி அவரது சிலைக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் இன்று மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். இந்திய அரசியலமைப்பின் சட்ட மாமேதை அம்பேத்கரின் 65வது நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி நாடு முழுவதும் அவரது சிலை மற்றும் உருவப்படத்திற்கு தலைவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர். டெல்லியில் அமைக்கப்பட்டுள்ள அம்பேத்கர் சிலைக்கு, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே உள்ளிட்ட தலைவர்கள் இன்று மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.