சென்னை விமான நிலையத்தில் ஒமிக்ரான் வைரஸ் பரிசோதனை நேரம் குறைப்பு

மீனம்பாக்கம்: சென்னை விமான நிலையத்தில் ஒமிக்ரான் பரிசோதனைக்காக காத்திருக்கும் பயணிகளின் காத்திருக்கும் நேரம் குறைக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் பயணிகளுக்கு கூடுதல் வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. ஒமிக்ரான் வைரஸ் பல்வேறு நாடுகளில் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவிலும் சில மாநிலங்களில் ஒமிக்ரான் பரவ தொடங்கியுள்ளது. தமிழகத்தில் இந்த வைரஸ் நுழையாமல் தடுக்க விமான நிலைய அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

கடந்த 1ம் தேதி முதல் ஆபத்து அதிகமாக உள்ள லண்டன், சிங்கப்பூர் உள்ளிட்ட 12 நாடுகள், ஆபத்து குறைவாக உள்ள இத்தாலி, ஜெர்மனி, ரஷ்யா உள்ளிட்ட 44 நாடுகளில் இருந்து சென்னைக்கு வரும் அனைத்து பணிகளுக்கும் சென்னை விமான நிலையத்தில் மருத்துவ பரிசோதனை நடத்தப்படுகிறது. இதில் ஆர்டி-பிசிஆர் டெஸ்ட் எடுக்கும் பயணிகள் 6 முதல் 7 மணி வரையிலும், ரேபிட் டெஸ்ட் எடுக்கும் பயணிகள் 1 மணி நேரம் வரையிலும் காத்திருக்கும் நிலை இருந்தது. இது பயணிகளுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தியது.

இதையடுத்து டெஸ்ட் எடுத்து காத்திருக்கும் பயணிகளுக்கு கூடுதல் வசதிகள் செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் காத்திருக்கும் நேரங்களும் குறைக்கப்பட்டுள்ளன. அதன்படி ஆர்டி-பிசிஆர் டெஸ்ட் எடுக்கும் பயணிகளுக்கு 5 முதல் 6 மணி நேரத்திற்குள்ளும், ரேபிட் டெஸ்ட் எடுக்கும் பயணிகளுக்கு 30 நிமிடத்தில் 45 நிமிடங்களுக்குள்ளும், மாற்று உள்நாட்டு விமானங்களில் செல்லக்கூடிய டிரான்சிஸ்ட் பயணிகளுக்கு 20 நிமிடங்களிலும் ரிசல்ட்கள் வருவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

அதோடு குடியுரிமை, சுங்கச்சோதனை பிரிவுகளில் கூடுதல் கவுன்டர்கள் திறக்கப்பட்டு, பயணிகள் தாமதமில்லாமல் மருத்துவ பரிசோதனை பகுதிக்கு வர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மருத்துவ பரிசோதனை முடிந்து காத்திருக்கும் பயணிகள் பகுதியில் இருக்கைகள் எண்ணிக்கை 450ல் இருந்து 500ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் அப்பகுதியில் நியாயமான விலையில் காபி, ஸ்நாக்ஸ் கிடைக்க ஸ்டால்கள் அமைக்கப்பட்டுள்ளன.

பாலூட்டும் தாய்மார்களுக்கு தனி அறை, வைபை, இலவச டெலிபோன் வசதிகள், பொழுபோக்கு சேனல்களுடன் டிவி, விமானங்கள் வருகை, புறப்பாடு திரைகள், வெளிநாட்டு பணங்களை மாற்றுவதற்கான கவுன்டர்கள் போன்றவைகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. நாளொன்றுக்கு 700 முதல் 800 பயணிகளுக்கு சோதனைகள் நடத்தப்படுகிறது. மேலும் கூடுதல் வசதிகள் செய்து கொடுக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக சென்னை விமானநிலைய அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒடிசா பெண்ணுக்கு ‘பாசிடிவ்’

லண்டனில் இருந்து பிரிட்டிஷ் ஏர்லைன்ஸ் விமானத்தில் நேற்று சென்னை வந்த 286 பயணிகளுக்கு தொற்று பரிசோதனை செய்யப்பட்டது. இதில் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த 32 வயது பெண்ணுக்கு பாசிடிவ் என்று ரிசல்ட் வந்தது. இதையடுத்து அவரை, ஆம்புலன்ஸ் மூலம் சென்னை கிண்டி கிங்ஸ் மருத்துவமனையில் சேர்த்தனர். அவரிடம் இருந்து மாதிரிகள் எடுக்கப்பட்டு, பரிசோதனைக்காக அனுப்பப்படுகிறது. அதன் முடிவு வந்தால்தான், அவருக்கு டெல்டா வைரசா அல்லது ஒமிக்ரான் வைரசா என்பது தெரியவரும்.

Related Stories: