ஆனைமலை : பொள்ளாச்சியை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில், கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்ததால், ஆழியாறு அருகே வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கவியருவியில் அவ்வப்போது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஒருவாரத்திற்கு முன்பு பெய்த கனமழை காரணமாக செம்மண் கலரில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால், சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. வெள்ளப் பெருக்கு குறைந்தால் மட்டுமே பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படும் என வனத்துறையினர், தினமும் அங்கு வந்த சுற்றுலா பயணிகளுக்கு அறிவுரை கூறி திருப்பி அனுப்பினர். இந்நிலையில், கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை குறைவால் கவியருவியில் வெள்ளப்பெருக்கின்றி தண்ணீர் ரம்மியமாக கொட்ட ஆரம்பித்தது.