குமரியில் செய்வினை கோளாறு நீக்க பூஜை நடத்துவதாக கூறி 10ம் வகுப்பு மாணவி பலாத்காரம்-போக்சோ சட்டத்தில் மந்திரவாதி கைது

மார்த்தாண்டம் : பேச்சிப்பாறை அருகே பூஜை நடத்துவதாக கூறி 10ம் வகுப்பு மாணவியை பலாத்காரம் செய்த மந்திரவாதியை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

குமரி மாவட்டம் மார்த்தாண்டம் பகுதியை சேர்ந்த தொழிலாளி ஒருவருக்கு 2 மகள்கள் உள்ளனர். இவரது மனைவி இறந்து விட்டார்.

மூத்த மகள் 10ம் வகுப்பும், 2 வது மகள் 7ம் வகுப்பும் படிக்கிறார்கள். இதில் 2 வது மகளுக்கு உடல் நல பிரச்னை இருந்ததால், பல மருத்துவர்களிடம் காண்பித்தும் குணமாகாத நிலையில், உறவினர் ஒருவர் கொடுத்த தகவலின் பேரில் பேச்சிப்பாறை அருகே உள்ள மணலோடை பகுதியை சேர்ந்த சேகர் (47) என்பவரை தொடர்பு கொண்டார். சேகர் காளி சிலை வைத்து பூஜை செய்வார். மாந்திரீகமும் செய்வதால் இவரிடம் பூஜைக்காக ஏராளமானவர்கள் வருவது உண்டு. அவர்களிடம் உங்கள் வீட்டில் பில்லி சூனியம், செய்வினை கோளாறுகள் உள்ளன என்றெல்லாம் கூறி, பூஜைகள் நடத்துவது வழக்கம்.

அதன்படி தொழிலாளியும் தனது 2 வது மகளை, மந்திரவாதி சேகரிடம் அழைத்து சென்றார். மூத்த மகளான 10ம் வகுப்பு மாணவியும் உடன் சென்றார். அப்போது மந்திரவாதி சேகர், உங்கள் குடும்பத்தில் செய்வினை கோளாறு அதிகரித்து விட்டது. 2, 3 நாட்கள் எனது இல்லத்தில் தங்கி இருந்து விடிய, விடிய பூஜை செய்ய வேண்டும். இரு மகள்கள் மட்டும் இருந்தால் போதும் என்றார்.  மந்திரவாதி சேகரின் மனைவியும் உடன் இருந்து, பூஜை செய்தால் உங்கள் குடும்பம் நன்றாக இருக்கும். உங்கள் மகள்களுடன் நான்  உடன் இருந்து கவனித்துக் கொள்கிறேன் என்றார். இதை நம்பி தொழிலாளியும் தங்கி இருந்து பூஜை செய்ய சம்மதம் தெரிவித்தார்.

அதன்படி பூஜைக்காக தங்கி இருந்த 10ம் வகுப்பு மாணவியை, சம்பவத்தன்று தனியாக அழைத்த மந்திரவாதி சேகர், உன் குடும்பம் நன்றாக இருக்க நான் உதவி செய்கிறேன். நான் கூறிய படி நீ கேட்க வேண்டும். அப்படி இல்லா விட்டால் உன் குடும்பத்தை பூஜை செய்து அழித்து விடுவேன் என மிரட்டி பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இது பற்றி வெளியே கூற கூடாது என்றும் தெரிவித்தார். இதனால் மாணவியும் வெளியே கூற வில்லை. மிரட்டியே பலமுறை மாணவியை பலாத்காரம் செய்து வந்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக மாணவியின் உடல் நிலையில் மாற்றம் ஏற்பட்டது. திடீரென வயிறு பெரிதானதால் அவரது தந்தை தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அங்கு பரிசோதனையில் மாணவி, 7 மாத கர்ப்பமாக இருந்தது தெரிய வந்தது. உடனடியாக மாணவியை ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கும் கர்ப்பமாக இருந்தது உறுதியானதால், 1098 சைல்டு லைனுக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து மாணவியை அழைத்து நடந்த விசாரணையில், மந்திரவாதி சேகர் பலாத்காரம் செய்தது தெரிய வந்தது. உடனடியாக  மார்த்தாண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ஞானபிரகாசி விசாரணை நடத்தி, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து மந்திரவாதி சேகரை நேற்று முன் தினம் கைது செய்தார். மாணவிக்கும், மந்திவாதிக்கும் மருத்துவ பரிசோதனை நடந்தது. தற்போது 7 மாதம் வரை ஆகி விட்டதால், கருவை கலைக்க முடியாத நிலை உள்ளது என்றும் டாக்டர்கள் கூறி உள்ளனர்.

Related Stories: