அச்சம் வேண்டாம்: தமிழகத்தில் இதுவரை யாருக்கும் ஒமிக்ரான் பாதிப்பு இல்லை...அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்..!!

சென்னை: தமிழ்நாட்டில் இதுவரை யாருக்கும் ஒமிக்ரான் பாதிப்பு இல்லை என கூறியுள்ள மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், ஒமிக்ரான் தொற்றை கண்டு யாரும் அச்சப்பட தேவையில்லை என்று தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடையே பேசிய அவர், உலகில் 38 நாடுகளில் ஒமிக்ரான் தொற்று வேகமாக பரவி வருகிறது என்றார். தமிழ்நாட்டில் இதுவரை யாருக்கும் ஒமிக்ரான் பாதிப்பு இல்லை என்றும் ஒமிக்ரான் தொற்றை கண்டு யாரும் அச்சப்பட தேவையில்லை என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

12 நிலையங்களில் ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை நிலையங்கள் செயல்பட தொடங்கியுள்ளதாகவும், வரும் சனிக்கிழமை 14வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெற இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். சிங்கப்பூரில் இருந்து இலங்கை வழியாக மதுரை விமான நிலையம் வந்த நாகர்கோவிலை சேர்ந்தவருக்கு நேற்று முன்தினம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், மதுரை வரும் பயணிகளுக்கு சோதனையை அதிகரிக்க சுகாதாரத்துறை முடிவு செய்திருக்கிறது.

கடந்த புதன்கிழமை முதல் திருச்சி விமான நிலையத்தில் ஒமிக்ரான் தொற்று பரவல் அச்சுறுத்தல் உள்ள நாடுகளான சிங்கப்பூரில் இருந்து வரும் பயணிகளுக்கு கட்டாயமாக ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை செய்யப்படுகிறது. மேலும் கடந்த 6 நாட்களில் ஒரே ஒரு பயணிக்கு மட்டும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் ஒரேநாளில் 17 பேருக்கு ஒமிக்ரான் வகை கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டிருக்கும் நிலையில், இந்த புதிய வைரஸால் நாட்டில் மீண்டும் ஒரு கொரோனா அலை வருமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.

Related Stories: