ஜம்மு: காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான குலாம் நபி ஆசாத், தனிக்கட்சி தொடங்க திட்டமிட்டு இருப்பதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவர் குலாம் நபி ஆசாத். ஜம்மு காஷ்மீர் முதல்வர், ஒன்றிய அமைச்சர், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் என, காங்கிரசில் பல்வேறு பொறுப்புகளை வகித்தவர். கட்சி அமைப்புகளுக்கும், தேசிய தலைவர் பதவிக்கும் தேர்தல் நடத்தும்படி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு இவர் உட்பட காங்கிரசை சேர்ந்த 23 மூத்த தலைவர்கள் கடந்தாண்டு கடிதம் எழுதியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது, இவர் கட்சி தலைமையின் மீது கடும் அதிருப்தியில் இருப்பதாக கருதப்படுகிறது. ஜம்மு காஷ்மீர் முழுவதும் சமீப காலமாக இவர் சுற்றுப் பயணம் செய்து, தனது ஆதரவாளர்களை சந்தித்து வருகிறார்.