திருமலை: ‘திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வேலைக்கு ஆட்கள் தேர்வு நடப்பதாக சமூக வலைதளங்களில் மோசடி விளம்பரங்களை பரப்பும் கும்பலை நம்பி ஏமாற வேண்டாம்,’ என்று தேவஸ்தானம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இது தொடர்பாக நேற்று அது வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருப்பதி தேவஸ்தானத்தில் பல்வேறு பணிகளுக்கு ஆட்கள் தேர்வு நடைபெற உள்ளதாக சமூக வலைதளங்களில் தேவஸ்தானம் விளம்பரம் வெளியிட்டதாக, உண்மைக்கு புறம்பான தகவல்களை சிலர் பரப்பி வருகின்றனர். இதனை யாரும் நம்பி ஏமாற வேண்டாம். கடந்த காலங்களிலும் தேவஸ்தானத்தில் வேலை வாங்கி தருவதாக சிலர் மோசடி செய்து, பணம் வசூலித்த சம்பவங்கள் நடந்துள்ளன. அந்த நபர்கள் மீது கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.