3 இடங்களில் மண், பாறை சரிவு ஊட்டி மலை ரயில் சேவை டிச.14 வரை ரத்து: ரயில்வே அறிவிப்பு

மேட்டுப்பாளையம்: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் வழியாக ஊட்டிக்கு மலை ரயில் தினசரி காலை 7.10 மணிக்கு புறப்பட்டு செல்லும். சுற்றுலாப் பயணிகளின் மனம் கவர்ந்த இந்த மலை ரயில் பாதை கல்லார் முதல் குன்னூர் வரை சுமார் 20 கிலோ மீட்டர் தூரம் மலைப்பாதை வழியாக அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த அக்டோபர் மாதம் பெய்த பலத்த மழையால் பாறைகள் உருண்டு விழுந்ததால் ரயில் பாதை சேதமானது. அக்.23ம் தேதி முதல் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது சீரமைப்பு பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டு வந்தனர். இருப்பினும், அவ்வப்போது பெய்த மழையால் ரயில் பாதையில் மண்சரிவு ஏற்பட்டது. இதனால், ரயில் போக்குவரத்தை துவங்க முடியவில்லை.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக பெய்த மழையால் கல்லார் முதல் ஹில்குரோ ரயில் நிலையம் வரை 3 இடங்களில் மண்சரிவு மற்றும் பாறை உருண்டு விழுந்தது. இதனால்,  ரயில் பாதை முற்றிலுமாக மூடப்பட்டுள்ளது. மேலும், பல இடங்களில் ரயில் பாதையில் மண்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளது. சீரமைப்புப் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதனையடுத்து பாதுகாப்பு கருதி ரயில் போக்குவரத்தை வரும் 14ம் தேதி வரை ரத்து செய்து சேலம் கோட்ட ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Related Stories: