சேலம்: சேலம் மத்திய, கிழக்கு, மேற்கு மாவட்ட திமுக அவசர செயற்குழு கூட்டம் சேலத்தில் நேற்று நடந்தது. தமிழக நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமை வகித்தார். கூட்டத்தில், அமைச்சர் கே.என்.நேரு பேசியதாவது: ஒரேநாளில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடக்கும் என கருதுகிறேன். விரைவில் தேர்தலை மாநில தேர்தல் ஆணையம் அறிவிக்கவுள்ளது. தேர்தலை தைரியமாக சந்தித்து 100 சதவீத வெற்றியை வசப்படுத்த வேண்டும். கூட்டுறவு சங்க நிர்வாகக்குழுவை கலைப்பது பற்றி உடனடியாக எதுவும் செய்ய இயலாது.
நான் 1996-2001ம் ஆண்டில் கூட்டுறவுத்துறை அமைச்சராக இருந்துள்ளேன். அப்போது இருந்த சட்ட திட்டங்கள் வேறு. இப்போது இருக்கும் சட்ட திட்டங்கள் வேறு. தற்போது ஆட்சி மாறினாலும், உடனடியாக கூட்டுறவு சங்கங்களை கலைக்க முடியாமல் போனதற்கு காரணம் அது தான். அதேமாதிரி அதிமுக ஆட்சியில் கூட்டுறவு துறையில் நிறைய முறைகேடுகள் நடந்துள்ளது. அதுபற்றி விசாரிக்கப்பட்டு வருகிறது. அதனால், சட்ட திட்டங்களை ஆராய்ந்து கூட்டுறவு சங்க நிர்வாகக்குழுவை கலைக்க விரைவில் நல்ல முடிவு எடுக்கப்படும். இவ்வாறு அமைச்சர் கே.என்.நேரு பேசினார்.