8 அணைகளின் புனரமைப்புக்கான திட்ட அறிக்கை தயாரிப்பு தீவிரம்: நீர்வளத்துறை அதிகாரி தகவல்

சென்னை: தமிழகத்தில் அணைகள் புனரமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் இரண்டாவது கட்டமாக  உலக வங்கியின் நிதியுதவியின் கீழ் நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 37 அணைகள் புனரமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி ரூ.54.47 கோடி செலவில் சாத்தனூர் அணை, ரூ.7.65 கோடியில் கிருஷ்ணகிரி அணை, ரூ.18.44 கோடியில் கெலவரப்பள்ளி அணை, ரூ.7.72 கோடியில் விடூர் அணை, ரூ.34.69 கோடியில் மணிமுக்தாநதி அணை, ரூ.7.48 கோடியில் மிருகானந்தநதி அணை, ரூ.4.25 கோடியில் சாத்தையாறு அணை, ரூ.8.40 கோடியில் இருக்கன்குடி அணை, ரூ.1.12 கோடியில் ராமநதி அணை, ரூ.2.50 கோடியில் வடக்கு பச்சையாறு அணை, ரூ.2.50 கோடியில் குண்டாறு அணை, ரூ.15.50 கோடியில் ஆணை குட்டம் அணை, ரூ.3 கோடியில் கடனாநதி அணை, ரூ.1.30 கோடியில் பெருஞ்சாணி அணை, ரூ.3.95 கோடியில் வைகை அணை, ரூ.2.05 கோடியில் சண்முகாநதி அணை, ரூ.17.65 கோடியில் பொன்னையாறு அணை, ரூ.14.95 கோடியில் மேட்டூர் அணை, ரூ.4.95 கோடியில் குடகனாறு அணை, ரூ.3 கோடியில் சோலையாறு அணை, ரூ.5.95 கோடியில் கீழ் பவானி அணை, ரூ.4.95 கோடியில் பெரும்பள்ளம் அணை, ரூ.2.21 கோடியில் நல்லாதாங்கள் ஓடை, ரூ.5.74 கோடியில் மேல் நீராறு, ரூ.12.14 கோடியில் கீழ் நீராறு, ரூ.27 கோடியில் பரம்பிகுளம் அணை, ரூ.11.55 கோடியில் தூணக்கடவு மற்றும் பெருவாரிபள்ளம் அணை, ரூ.10.85 கோடியில் திருமூர்த்தி அணை உட்பட 37 அணைகளின் புனரமைப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது.

இதன் மூலம், அணைகளின் கரையை பலப்படுத்துவது, மதகுகள் சீரமைப்பது, சேதமடைந்த மதகுகளை மாற்றுவது, நீர்வழிந்தோடும் பகுதிக்கு மேல் ‘டெக் பிரிட்ஜ்’ கட்டுவது, இணைப்பு சாலையை உறுதிப்படுத்துவது உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக உலக வங்கியுடன், அணைகள் இயக்கம் மற்றும் பராமரிப்பு ஒப்பந்தம் செய்துள்ளது. இதை தொடர்ந்து, முதற்கட்டமாக சோலையாறு, மேல் நீராறு, சாத்தனூர், கெலவரப்பள்ளி, செண்பகாதோப்பு ஆகிய 5 அணைகளின் புனரமைப்பு பணிக்கு டெண்டர் விடப்பட்டுள்ள நிலையில் ஒப்பந்த நிறுவனம் இறுதி செய்யப்பட உள்ளது.

தொடர்ந்து மேட்டூர், ஆணைக்குட்டம், பவானிசாகர், ஆழியாறு, இருக்கன்குடி, வைகை, பரம்பிகுளம், தூணக்கடவு மற்றும் பெருவாரிபள்ளம் உட்பட 8 அணைகளில் புனரமைக்கப்பட உள்ளது. இதற்காக, அணைகள் பாதுகாப்பு இயக்கக தலைமை பொறியாளர் ராஜேந்திரன் தலைமையிலான பொறியாளர்கள் குழுவினர் நேரில் ஆய்வு செய்தனர். தொடர்ந்து அந்த அணைகளின் புனரமைப்பு பணிக்காக திட்ட அறிக்கை தயார் செய்யும் பணி வேகமாக நடந்து வருகிறது. இந்த அணைகளின் புனரமைப்பு பணியை ஏப்ரல், மே மாதங்களில் மேற்கொள்ளும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று நீர்வளத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Related Stories: