சென்னை: தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் 44,288 கோயில்கள் உள்ளன. இந்த கோயில்களை நிர்வகிக்க இணை ஆணையர் 11, துணை ஆணையர் 9, உதவி ஆணையர் 27, செயல் அலுவலர் நிலை-1 66, செயல் அலுவலர் நிலை-2 111, செயல் அலுவலர் நிலை-3 250, செயல் அலுவலர் நிலை-4 154 என மொத்தம் 628 பணியிடங்கள் உள்ளன. இதில், 100க்கும் மேற்பட்ட செயல் அலுவலர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால், ஒரு செயல் அலுவலர் 10 முதல் 20 கோயில்கள் வரை நிர்வகிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், அந்த கோயில்சொத்துகள் ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் உள்ளது. மேலும், பல கோயில்களில் வாடகை தாரர்களிடம் பாக்கி தொகையை பெற முடியாமல் உள்ளது. தற்போது, திமுக ஆட்சி பொறுப்பேற்றதும் கோயில் நிலங்களை மீட்பது, வாடகை பாக்கி வசூல் செய்வதில் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த நிலையில், கோயில்களின் வருவாய்க்கேற்பவும், நிர்வகிக்க வசதியாக புதிதாக 40 செயல் அலுவலர்கள் பணியிடங்கள் உருவாக்க அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் அரசுக்கு பரிந்துரை செய்து கடிதம் எழுதியுள்ளார்.