குறைந்த விலைக்கு தங்கம் தருவதாக புதுச்சேரி முன்னாள் அமைச்சரின் மருமகன் உட்பட 3 பேரிடம் ரூ.6.30 கோடி மோசடி: 4 பேரை பிடித்து போலீஸ் விசாரணை

சென்னை: புதுச்சேரி முன்னாள் அமைச்சரின் மருமகன் உட்பட 3 பேரிடம் சுங்கத்துறை அதிகாரிகள் மூலம் குறைந்த விலையில் தங்கம் வாங்கி தருவதாக ரூ.6.30 கோடி மோசடி செய்த வழக்கில் 4 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். புதுச்சேரி மாநில முன்னாள் அமைச்சர் பன்னீர்செல்வம் மருமகன் பிரவீன் அலெக்சாண்டர் (31). இவரது நண்பர்கள் பிரபல ஐஸ்கிரீம் டீலர் கவுதமன் (29), முந்திரி, பிஸ்தா மொத்த வியாபாரி கணேஷ்குமார் (33). இந்நிலையில், சென்னை புளியந்தோப்பு கன்னிகாபுரம் பகுதியை சேர்ந்த தொழிலதிபர் பாலாஜி (34), அவரது தந்தை துளசிதாஸ் (59), மகேஷ் (45), மாதவரத்தை சேர்ந்த ஜெயகிருஷ்ணன் (43) ஆகிய 4 பேர் பிரவீன் அலெக்சாண்டருக்கு அறிமுகமாகியுள்ளனர்.

இதை பயன்படுத்தி அவரது நண்பரான கணேஷ்குமாரிடம், பாலாஜி சென்று தான் தங்கம், வெள்ளி,கார், செல்போன்கள் பில் இல்லாமல் வாங்கி விற்பனை செய்து வருவதாக தெரிவித்துள்ளார். தனது தந்தை துளசிதாஸ் ஐஏஎஸ் அதிகாரியாக வேலை செய்து வருவதாகவும், இதனால் சாஸ்திரி பவனில் பணியாற்றும் சுங்கவரித்துறை அதிகாரிகள் நன்றாக தெரியும் என்றும், இதனால் விமான நிலையத்தில் பிடிக்கும் தங்கத்தை குறைந்த விலைக்கு கொடுப்பார் என்றும் தெரிவித்துள்ளார்.

உடனே கணேஷ்குமார் ரூ.6 லட்சத்திற்கு பாலாஜியிடம் தங்கம் வாங்கியுள்ளார். அந்த தங்கத்தை பரிசோதனை செய்த போது சொக்கத் தங்கம் என தெரியவந்தது. உடனே அவர், பிரவீன் அலெக்சாண்டரிடம் பிளாக்கில் தங்கம் வாங்கியது குறித்து கூறியுள்ளார். பிறகு பிரவீன் அலெக்சாண்டர், கணேஷ்குமார், கவுதமன் ஆகியோர் ரூ.6.30 கோடிக்கு தங்கம் வாங்கி விற்பனை செய்ய முடிவு செய்தனர். அதன்படி கடந்த செப்டம்பர் மாதம் ரூ.6.30 கோடியை புதுச்சேரியில் வைத்து தொழிலதிபர் பாலாஜி உள்ளிட்ட 4 பேரிடம் கொடுத்துள்ளனர். ஆனால் பணம் பெற்று 2 மாதங்கள் ஆகியும் தங்கம் வாங்கி தரவில்லை. சந்தேகமடைந்த 3 பேரும் பல முறை பாலாஜியிடம் பணத்தை திரும்ப கேட்டதற்கு அவர்கள் முறையாக பதில் அளிக்கவில்லை.

அதிர்ச்சியடைந்த புதுச்சேரி மாநில முன்னாள் அமைச்சர் மருமகன் பிரவீன் அலெக்சாண்டர், கவுதமன், கணேஷ்குமார் ஆகியோர் கீழ்ப்பாக்கம் துணை கமிஷனரிடம் நேரடியாக புகார் அளித்தனர். புகாரின்படி விசாரணை நடத்த பெரியமேடு போலீசாருக்கு துணை கமிஷனர் உத்தரவிட்டார். பெரியமேடு போலீசார் தொழிலதிபர் பாலாஜி, அவரது தந்தை துளசிதாஸ், மகேஷ்,ஜெயகிருஷ்ணன் ஆகியோரை பிடித்து மோசடி குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், தொழிலதிபர் பாலாஜியின் தந்தை துளசிதாஸ் செக்யூரிட்டி நிறுவனத்தில் வேலை செய்து வருவதாகவும், தங்கம் வாங்கி கொடுக்க தங்களிடம் ரூ.1.50 கோடி மட்டுமே கொடுத்ததாகவும் தெரிவித்துள்ளனர். ஆனால் முன்னாள் அமைச்சரின் மருமகன் ரூ.6.30 கோடி கொடுத்ததாக புகார் அளித்துள்ளனர்.இதனால் இந்த மோசடி குறித்து போலீசார், அந்த 4 பேரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: