பெட்ரோல், டீசல், காஸ் விலை உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் விரைவில் போராட்டம்: விக்கிரமராஜா அறிவிப்பு

நாமக்கல்: பெட்ரோல், டீசல், காஸ் விலை உயர்வை கண்டித்து, தமிழகம் முழுவதும் விரைவில் போராட்டம் நடத்தப்படும் என வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில தலைவர் அறிவித்துள்ளார். நாமக்கல்லில் நகர தினசரி மார்க்கெட் காய்கறி வியாபாரிகள் சங்கத்தின் கலந்துரையாடல் கூட்டம், நேற்று நடைபெற்றது. மாவட்ட தலைவர் ஜெயக்குமார் வெள்ளையன் தலைமை வகித்தார். மாநில மூத்த துணைத்தலைவர் பெரியசாமி முன்னிலை வகித்து பேசினார். இதில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில தலைவர் விக்கிரமராஜா கலந்து கொண்டு பேசினார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: நாமக்கல் காய்கறி மார்க்கெட்டில் கடந்த 12 ஆண்டாக அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை. நவீன முறையில் காய்கறி மார்க்கெட்டை மாவட்ட நிர்வாகம் கட்டிக் கொடுக்க வேண்டும். வணிக நல வாரிய உறுப்பினராக அனைத்து வணிகர்களையும் இணைக்க வேண்டும். அதற்காக உறுப்பினர் சேர்க்கைக்கு 3 மாத கால அவகாசம் வேண்டும் என என தமிழக முதல்வரை சந்தித்து கேட்டுள்ளோம். ஒன்றிய நிதிஅமைச்சர், ரெடிமேட் சட்டைகளுக்கு ஜிஎஸ்டி வரியை 5 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக உயர்த்தியுள்ளார். இதை குறைக்க வலியுறுத்தி, டெல்லியில் ஒன்றிய அமைச்சரை சந்தித்து மனு அளிக்கப்படும்.

காஸ் சிலிண்டர் விலை உச்சத்தை நோக்கி சென்றுள்ளது. ஓராண்டில் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. இதன் மூலம் சாதாரண மக்கள் ஓட்டலில் வாங்கிச் சாப்பிடும் உணவுப்பொருட்களின் விலை உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, காஸ் சிலிண்டர் விலையை குறைக்கவேண்டும். பெட்ரோல், டீசல், சமையல் காஸ் விலை உயர்வை கண்டித்து, இம்மாத இறுதியில் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தப்படும். கொரோனா காலத்தில் உயிரிழந்த வணிகர்களின் குடும்பத்தினருக்கு அரசு இழப்பீடு வழங்கவேண்டும். முதல்வரிடம் இந்த கோரிக்கையை வலியுறுத்தியுள்ளோம். நிச்சயம் வழங்குவதாக முதல்வர் உறுதி அளித்துள்ளார். இவ்வாறு விக்கிரமராஜா கூறினார்.

Related Stories: