மகளிர் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி

புதுடெல்லி: பிசிசிஐ ஐபிஎல் தொடரில் லக்னோ மற்றும் அகமதாபாத் என இரண்டு புதிய அணிகளுக்கு அனுமதி  கொடுத்தது. இதன் மூலம் ஐபிஎல் அணிகளின் எண்ணிக்கையை 8ல் இருந்து 10 ஆக  உயர்த்தியது. பிசிசிஐ ஆண்கள் கிரிக்கெட்டுக்கு தொடர்ந்து முதலீடு செய்து வருகிறது, ஆனால்  பெண்கள் கிரிக்கெட்டுக்கு அவ்வளவு முக்கியத்துவம் தரவில்லை.

ஒருபுறம்  ஐபிஎல் மூலம் கோடிகளை குவிப்பதால் ஐசிசிஐக்கு பாராட்டுக்கள் குவிந்தாலும் பெண்கள் ஐபிஎல் தொடங்காததால் பிசிசிஐ விமர்சனங்களையும்  சந்தித்து வருகிறது.  

ஆஸ்திரேலியாவின் மகளிர் பிக் பாஷ்  லீக் மற்றும் இங்கிலாந்தின் மகளிர் சூப்பர் லீக் வெற்றி பெற்றாலும்,  கிரிக்கெட்டின் மிகப்பெரிய சந்தையான இந்தியாவில் பெண்கள் டி20 லீக்  நடைபெறாதது குறித்து பிசிசிஐ மீது கேள்விகளும் எழுந்தன. ஐபிஎல் 15வது சீசனுக்கு முன்னதாக பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில், இதுவரை ஆடவர் கிரிக்கெட்டில் மட்டுமே அறிமுகப்படுத்தப்பட்ட லீக் போட்டிகளான ஐபிஎல், இனி மகளிர் கிரிக்கெட்டிலும் விரிவுபடுத்துவது தொடர்பாக தொடர்ந்து கலந்தாலோசனைகள் மேற்கொண்டு வருவதாகவும் அடுத்த சில மாதங்களில் இதுகுறித்து முடிவு எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

ஏற்கெனவே பல முன்னாள் பெண்கள் கிரிக்கெட் வீரர்கள் மகளிர் கிரிக்கெட்டிலும் ஐபிஎல் போன்ற போட்டிகளுக்காக குரல் எழுப்பி வரும் நிலையில், சமீபகாலமாக இந்திய கிரிக்கெட் அணியின் டி20 கேப்டன் ஹர்மன்பிரீத் கவுரும் மகளிர் ஐபிஎல் போட்டிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது. எனவே பெண்கள் டி20 லீக் போட்டிகள் குறித்து பிசிசிஐ விரைவில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: