அஞ்சுகிராமம் அருகே பச்சை நிறமாக மாறிய கடல்: மீன்கள் செத்து கரை ஒதுங்கியதால் பொதுமக்கள் பீதி

அஞ்சுகிராமம்: அஞ்சுகிராமம் அருகே ரஸ்தா காட்டில் கடந்த சில தினங்களாக பச்சை நிறத்தில் கடல் நீர் காணப்படுகிறது. மேலும் அரிய வகை மீன்கள் இறந்த நிலையில்  கரை ஒதுங்கியுள்ளது. இதனால் பொதுமக்களிடையே  ஒருவித அச்சம் ஏற்பட்டுள்ளது.

குமரி மாவட்டம் அஞ்சுகிராமம் அருகே உள்ள ரஸ்தாகாட்டில் காயாவேம்பு பதி  அமைந்துள்ளது. இந்தப் பதியின் முன் பகுதியில் கடல் நீர் முழுவதும் பச்சை நிறத்தில் காணப்படுகிறது. மேலும் கடலில் இருந்து பாசி உள்ளிட்ட கழிவுகளை  கடல் அலை கரையில் ஒதுக்கித் தள்ளுகிறது.  ஒரு சில அரிய வகை மீன்களும் இறந்த நிலையில் கரை ஒதுங்கி வருகிறது.  பொதுவாக கடல் நீர் நீல நிறத்தில் காணப்படும். ஆனால் தற்போது இந்தப் பகுதியில் உள்ள கடல் நீர் பச்சை நிறத்தில் காணப்படுகிறது.

பொதுவாக சுனாமி போன்ற இயற்கை பேரிடர் காலங்களில் கடல் நீர் உள் வாங்குதல், கடல் நீரில் மாற்றம், பறவைகள் மற்றும் விலங்குகள் இடம் விட்டு இடம் பெயர்தல் போன்ற  சம்பவங்கள் ஏற்படுவதுண்டு. வடகிழக்கு பருவ மழை, கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை , புயல் போன்ற காரணங்களினால் தற்போது கனமழை பெய்து வரும் நிலையில் இச்சம்பவம்  அப்பகுதியை சேர்ந்த பொதுமக்களிடையே சுனாமி போன்ற  இயற்கை பேரிடர் சம்பவங்கள் ஏதேனும்  நிகழுமோ? அல்லது கடல் நீரில் ஏதேனும் விஷத்தன்மை கலந்து இருக்குமோ? என்ற அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: