அஷ்வின், சிராஜ் அபார பந்துவீச்சு; 62 ரன்னில் சுருண்டது நியூசிலாந்து: இந்தியா வலுவான முன்னிலை

மும்பை: நியூசிலாந்து அணியுடனான 2வது டெஸ்டில், 2வது இன்னிங்சில் விக்கெட் இழப்பின்றி 69 ரன் எடுத்துள்ள இந்தியா வலுவான முன்னிலை பெற்றுள்ளது. முன்னதாக, நியூசி. அணி முதல் இன்னிங்சில் 62 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.  வாங்கடே மைதானத்தில் நடக்கும் இப்போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த இந்திய அணி முதல் நாள் ஆட்ட முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 221 ரன் எடுத்திருந்தது. மயாங்க் 120 ரன், சாஹா 25 ரன்னுடன் நேற்று 2வது நாள் ஆட்டத்தை தொடங்கினர். சாஹா 27 ரன் எடுத்து வெளியேற, அஷ்வின் கோல்டன் டக் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார். அடுத்து அகர்வாலுடன் அக்சர் இணைந்தார். இருவரும் 7வது விக்கெட்டுக்கு 67 ரன் சேர்த்தனர்.

அகர்வால் 150 ரன் (246 பந்து, 14 பவுண்டரி, 4 சிக்சர்), அக்சர் படேல் 52 ரன் (128 பந்து, 5 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி அஜாஸ் சுழலில் விக்கெட்டை பறிகொடுத்தனர். ஜெயந்த் யாதவ் 12, முகமது சிராஜ் 4 ரன் எடுத்து அஜாஸ் பந்துவீச்சில் ஆட்டமிழக்க, இந்தியா முதல் இன்னிங்சில் 325 ரன் குவித்து ஆல் அவுட்டானது. உமேஷ் (0) ஆட்டமிழக்காமல் இருந்தார். நியூசிலாந்து பந்துவீச்சில் அஜாஸ் படேல் இந்தியாவின் 10 விக்கெட்டையும் முழுமையாகக் கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்தார்.

இதையடுத்து, முதல் இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து அணி முகமது சிராஜ், அஷ்வின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 28.1 ஓவரில் 62 ரன் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. கேப்டன் டாம் லாதம் 10 ரன், கைல் ஜேமிசன் 17 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் அனைவரும் ஒற்ரை இலக்க ரன்னில் அணிவகுத்தனர் (2 பேர் டக் அவுட்). இந்திய பந்துவீச்சில் அஷ்வின் 4, சிராஜ் 3, அக்சர் 2, ஜெயந்த் 1 விக்கெட் வீழ்த்தினர்.

முதல் இன்னிங்சில் 263 ரன் முன்னிலை பெற்றாலும், இந்தியா பாலோ ஆன் கொடுக்காமல் 2வது இன்னிங்சை தொடங்கியது. பீல்டிங்கின்போது கில் காயம் அடைந்ததால் மயாங்க், புஜாரா களமிறங்கி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்தியா 2வது நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 69 ரன் எடுத்துள்ளது. மயாங்க் 38, புஜாரா 29 ரன்னுடன் களத்தில் உள்ளனர். 332 ரன் முன்னிலையுடன் இந்தியா வலுவான நிலையில் இருக்க இன்று 3வது நாள் ஆட்டம் நடைபெறுகிறது.

Related Stories: