சென்னை முழுவதும் நவீன தொழில்நுட்பத்துடன் அனைத்து சாலைகளையும் செப்பனிடும் பணிகளை விரைந்து முடியுங்கள்: அமைச்சர் எ.வ.வேலு உத்தரவு

சென்னை: நவீன தொழில்நுட்பத்துடன் சென்னை மாநகரம் முழுவதும் நெடுஞ்சாலைத் துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து சாலைகளையும் செப்பனிடும் பணிகளை விரைந்து  மாண்புமிகு பொதுப்பணித்துறை அமைச்சர் உத்தரவு பிறப்பித்துள்ளார். சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த கனமழையால் சாலைகள் பெரும்பாலும் பாதிக்கப்பட்டன. பொதுப்பணிகள், நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் திரு. எ.வ.வேலு அவர்கள் பல்வேறு இடங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது, முதல் கட்ட நடவடிக்கையாக சென்னையில் உள்ள மழை வெள்ள நீரை வெளியேற்றுவதற்கு தேவையான நடவடிக்கைள் உடனுக்குடன் எடுக்கப்பட்டு மழை வெள்ள நீர் அகற்றப்பட்டது.

அதை தொடர்ந்து சென்னை நெடுஞ்சாலைத் துறைக்கு உட்பட்ட 258 கி.மீ சாலைகளை ஆய்வு செய்து அதில் 58 கி.மீ சாலைகள் சிதிலமடைந்ததை பார்வையிட்ட அமைச்சர், நெடுஞ்சாலைத் துறை தலைமைப் பொறியாளர் மற்றும் கோட்டப் பொறியாளர்களுடன் கலந்தாலோசித்து சில நவீன தொழில்நுட்ப கருவிகளை பயன்படுத்தி இச்சாலைகளை சரி செய்ய முடிவு எடுக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, நேற்று அமைச்சர் எ.வ.வேலு, தரமணி முதல் பெருங்குடி சாலை வரை நடைபெறும் பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்து அச்செய்முறைகளை பார்வையிட்டார். பிறகு இப்பணிகளை விரைவுப்படுத்த அதே தொழில்நுட்பத்தை கொண்டு பாதிக்கப்பட்ட மற்ற சாலைப் பணிகளையும் விரைந்து முடிக்க உத்தரவிட்டார்.

மேலும் ,சென்னை மாநகரம் முழுவதும் பல்வேறு இடங்களை ஆய்வு செய்து பணிகள் விரைவுப்படுத்தப்பட்டது.  சாலைகள் செப்பனிடும் பணிகள் கோயம்பேடு, கொளத்தூர், அண்ணா சாலை, தாம்பரம், சோழிங்கநல்லூர் மற்றும் சேலையூர் பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகின்றன.  இன்னும் சில நாட்களில் சாலைகள் அனைத்தும் செப்பனிடப்பட்டு போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என பொதுப்பணித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Related Stories: