சென்னை: சென்னை அடுத்த ஆவடியில் முகநூல் மூலம் பழகி காவலர் உட்பட இருவரிடம் ரூ.34 லட்சம் ஏமாற்றிய பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டம் மூலக்கரையை சேர்ந்த பாரதிராஜா, திருவொற்றியூரில் உள்ள கடற்படையில் பணியாற்றி வருகிறார். இவருக்கு முகநூல் மூலம் ஆவடியில் வசிக்கும் ஐஸ்வர்யா என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
தான் மருத்துவர் என கூறி அறிமுகமான ஐஸ்வர்யா பாரதிராஜாவை திருமணம் செய்து கொள்வதாக கூறியுள்ளார். அதனை நம்பி பாரதிராஜா தவணை முறையில் ரூ.14 லட்சம் ஐஸ்வர்யாவிடம் கொடுத்ததாக தெரிகிறது. இதற்கிடையே பாரதிராஜாவின் பெரியப்பா மகன் மகேந்திரனிடமும் ரூ.20 லட்சம் மற்றும் ஒரு தங்க சங்கிலி ஆகியவற்றை ஐஸ்வர்யா வாங்கியதாக கூறப்படுகிறது.
இருவரும் ஏமாற்றப்பட்டதை அறிந்து பாரதிராஜா சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். இது குறித்து விசாரணை மேற்கொண்ட போலீசார் ஐஸ்வர்யாவை கைது செய்தனர். 12-ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள ஐஸ்வர்யா ஏற்கனவே திருமணம் ஆனவர் என்றும் அவர் கணவர் வேளாண் துறையில் பணியாற்றி வருவதுவும் காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.