பூந்தமல்லி: கடந்த சில தினங்களாக பெய்த கனமழை காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பல்வேறு இடங்களில் மழைநீர் சூழ்ந்துள்ளது. இதன் ஒரு பகுதியாக மதுரவாயல் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 147வது வார்டு ஆலப்பாக்கம் பகுதியில் உள்ள சென்னை மாநகராட்சி தொடக்க பள்ளியில் முழங்கால் அளவிற்கு நீச்சல் குளம்போல் காட்சியளித்து மழைநீர் தேங்கியுள்ளது.
மேலும், பள்ளி வளாகம் மட்டுமின்றி வகுப்பறைகள், சத்துணவு கூடம், மைதானம் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால், மேசைகள் நாற்காலிகள் உள்ளிட்ட பொருட்கள் நீரில் மூழ்கி நாசமாகியுள்ளது. மழைநீர் வெளியேற்றப்படாததால் கடந்த 4 நாட்களாக பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால் மாணவ, மாணவிகளின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, தேங்கிய மழைநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்ககோரி மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர் கோரிக்கை வைத்துள்ளனர்.