புதுடெல்லி: ‘சீனா உடனான வடக்கு எல்லையில் நாட்டின் பாதுகாப்பு சூழல் சிக்கலாகதான் இருக்கிறது,’ என்று கடற்படை தளபதி ஹரி குமார் கவலை தெரிவித்துள்ளார். ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 4ம் தேதி கடற்படை தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு டெல்லியில் நேற்று கடற்படை தளபதி ஹரி குமார் அளித்த பேட்டி வருமாறு:கடற்படையில் பெண்களை சேர்ப்பதற்கும், முக்கிய பதவிகள் மற்றும் பொறுப்புக்களை பெண் அதிகாரிகளுக்கு வழங்குவதற்கும் கடற்படை தயாராக இருக்கிறது. இதுவரையில் கடற்படையின் முக்கிய 15 போர் கப்பல்களில் 28 பெண் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கை மிக விரைவில் அதிகரிக்கும்.