ஆளுநர் மாளிகை, தலைமை செயலகம் உள்பட 4 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்: மர்ம கடிதம் அனுப்பிய முன்னாள் ரயில்வே ஊழியருக்கு வலை

சென்னை: சென்னையில் ஆளுநர் மாளிகை, தலைமை செயலகம், எழும்பூர் ரயில்நிலையம் உட்பட 4 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து மர்ம கடிதம் அனுப்பிய முன்னாள் ரயில்வே ஊழியரை போலீசார் தேடி வருகின்றனர். மதுராந்தகம் ரயில் நிலைய மேலாளருக்கு நேற்று மாலை கடிதம் ஒன்று வந்தது. அதில், சென்னை தலைமை செயலகம், கவர்னர் மாளிகை, எழும்பூர் ரயில் நிலையம், மேல்மருவத்தூர் ரயில் நிலையங்களில் இன்னும் சற்று நேரத்தில் வெடிகுண்டு வெடிக்கப் போவதாக எழுதியிருந்தது. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த நிலைய மேலாளர், உடனடியாக ரயில்வே போலீசாருக்கும், ரயில்வே உயர் அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து ரயில்வே போலீசார், தலைமை செயலகம், கிண்டி கவர்னர் மாளிகை போலீசாருக்கும் வெடிகுண்டு மிரட்டல் குறித்த தகவலை தெரிவித்துள்ளார்கள். அவர்கள் அளித்த தகவலின் பேரில் தலைமை செயலகம், கவர்னர் மாளிகையில் போலீசார் மோப்ப நாய் உதவியுடன் தீவிர சோதனை நடத்தினர்.அதேபோன்று, எழும்பூர் ரயில் நிலையம், மேல்மருவத்தூர் ரயில் நிலையங்களில் ரயில்வே பாதுகாப்புப்படை கமிஷனர் செந்தில் குமரேசன் உத்தரவின் பேரில் மோப்பநாய், மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் போலீசார் சோதனை நடத்தினர். மேலும் எழும்பூர் ரயில் நிலைய ரயில்வே பாதுகாப்புப்படை இன்ஸ்பெக்டர் சிவனேசன் தலைமயிலான போலீசார் பார்சல் அலுவலகம், கார் பார்க்கிங், ரயில் தண்டவாளங்கள், ரயில் பெட்டிகளில், பயணிகள் காத்திருக்கும் அறைகளில் தீவிர சோதனை நடத்தினர்.

இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சென்னை ரயில்வே போலீஸ் சூப்பிரண்டு அதிவீரபாண்டியன் உத்தரவின் பேரில் மர்ம கடிதம் அனுப்பி, வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் யார் என்பது குறித்து செங்கல்பட்டு ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.  விசாரணையில்,  கடிதம் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் மேல்மருவத்தூரை சேர்ந்த கங்காதரன் (60) என்பதும், ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து ரயில்வே போலீசார் அவரை தேடி வருகின்றனர். இந்த வெடிகுண்டு மிரட்டல் சம்பவத்தால் கவர்னர் மாளிகை, தலைமை செயலகம், ரயில் நிலையங்கள் முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: