ஒமிக்ரான் பாதிப்புள்ள நாட்டில் இருந்து வந்த 3 பேரின் மாதிரிகள் மரபியல் ஆய்வுக்கு அனுப்பி வைப்பு: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை: ஒமிக்ரான் பாதிப்புள்ள நாட்டில் இருந்து தமிழகம் வந்த 3 பேரின் மாதிரிகள் மரபியல் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். சென்னை, தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:  தென் ஆப்பிரிக்காவில் புதிய தொற்று உருவான மறுநாளே தமிழகத்தில் நடவடிக்கையை தொடங்கி விட்டோம். தமிழகத்தில் உள்ள சர்வதேச விமான நிலையங்களில் குறிப்பிட்ட 11 நாடுகளில் இருந்து வந்தவர்களுக்கு முதலில் காய்ச்சல் பரிசோதனை, அடுத்து ஆர்டிபிசிஆர் சோதனை செய்யப்பட்டது. அதில் நெகட்டிவ் வந்தாலும் 7 நாள் அவர்கள் வீட்டு தனிமையில் இருப்பதை உள்ளாட்சி, காவல்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.

விமான நிலையத்தில் நேற்று முன்தினம் 1868 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பாதிப்பற்ற நாட்டில் இருந்து வருவோருக்கு ஆர்டிபிசிஆருக்கான 700 கட்டணத்தை அரசே செலுத்துகிறது. பாதிப்பு இல்லாத நாடுகளில் இருந்து வருவோர்களில் தோராயமான முறையில் 2 சதவீதம் பேருக்கு பரிசோதனை செய்யப்படுகிறது. வெளிநாட்டில் இருந்து வருவோருக்கு அரசு மருத்துவமனையில் இலவசமாக மருத்துவம் பார்க்கப்படும். ஒமிக்ரானுக்காக 6 மருத்துவமனையில் சிறப்பு படுக்கை வார்டுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. லண்டனில் இருந்து சென்னைக்கு வந்த 11 வயது சிறுமி உள்பட இருவருக்கும், சிங்கப்பூரில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு வந்த 56 வயது நபருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்களது மாதிரிகள் பெங்களூருவில் உள்ள ஆய்வகத்திற்கு மரபணு பகுப்பாய்வு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இதுவரை வெளிநாடுகளில் இருந்து வந்த 1,868 பேரில் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களுடன் 9 பேர் தனிமைப்படுத்தப்பட்டு ஒமிக்ரான் பாதிப்பு இருக்கிறதா என அவர்களது மாதிரிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.  இரு விமானத்தில் பயணித்த பயணியர், பணியாளர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நாட்டின் அனைத்து பன்னாட்டு விமான நிலையத்திலும் ஒமிக்ரானுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் முதல் தவணை கொரோனா தடுப்பூசியை 80 விழுக்காடு, இரண்டாம் தவணையை 45 விழுக்காட்டினர் செலுத்தியுள்ளனர். இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

3வது டோஸ்

மக்கள் நல்வாழ்வு துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறுகையில், ஒமிக்ரான் குறித்து பதற்றமடைய வேண்டியதில்லை. 10 நாளுக்கு பிறகே பாதிப்பு நிலவரம் முழுவதுமாக தெரியும். அயல் நாட்டிலிருந்து வந்த இருவருக்கும் அறிகுறியற்ற நிலையிலேயே கொரோனா உறுதியானது. ஒமிக்ரான் பாதிப்பு குறித்து மட்டும் பேசி தற்போது நாள்தோறும் 700 என்றளவில் பதிவாகி வரும் டெல்டாவை மறந்து விடக் கூடாது. 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் டோஸ் வழங்குவது குறித்து இந்திய கொரோனா ஜினாமிக்ஸ் கூட்டமைப்பு ஆலோசனை வழங்கியுள்ளனர். ஒன்றிய அரசு ஒப்புதல் அளிக்கும் பட்சத்தில் மூன்றாவது தடுப்பூசி செலுத்துவது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Related Stories: