பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான 2ம் கட்ட கலந்தாய்வை எதிர்த்த வழக்கு தள்ளுபடி: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: 2021-22ம் கல்வியாண்டுக்கு பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு கடந்த அக்டோபர் மாதம் 4 சுற்றுகளாக நடத்தப்பட்டது. இதில் மொத்தமுள்ள 1 லட்சத்து 51 ஆயிரத்து 870 இடங்களில், 70,437 இடங்கள் காலியாக உள்ளன. அதை நிரப்பும் வகையில், 2வது கட்ட கலந்தாய்வு நடத்த முடிவு செய்து நவம்பர் 25ல் உயர் கல்வித் துறை செயலாளர் அரசாணை பிறப்பித்தார். 2வது கலந்தாய்வு நடத்தினால் ஏற்கனவே தங்கள் கல்லூரிகளில் சேர்ந்த மாணவர்கள் வெளியேறக் கூடும் என்பதால் இந்த அரசாணைக்கு தடை விதிக்க கோரியும், அதை ரத்து செய்யக் கோரியும் தமிழ்நாடு தனியார் சுயநிதி தொழில் கல்வி, கலை,அறிவியல் கல்லூரிகள் கூட்டமைப்பின் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த மனுவில், பொறியியல் கல்லூரிகளில் நடப்பு கல்வியாண்டில் நவம்பர் 30ல் வகுப்புகளை தொடங்க வேண்டும் என அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் குழுமம் உத்தரவிட்டுள்ள நிலையில், தமிழக அரசு பிறப்பித்த அரசாணை தன்னிச்சையானது. கடந்த 17 ஆண்டுகளாக 2வது கலந்தாய்வு நடத்தப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கு, நீதிபதி தண்டபாணி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அட்வகேட் ஜெனரல் ஆர்.சண்முகசுந்தரம் ஆஜராகி, தொழில்நுட்ப கல்வி இயக்குனர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்தார். அதில், தகுதியான மாணவர்களுக்கு இடம் வழங்கும் வகையில் டிசம்பர் இறுதி வரை மாணவர் சேர்க்கை நடத்த அனுமதி கோரி அகில இந்திய தொழில்நுட்ப கல்வி குழுமத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதால், 2வது கட்ட கலந்தாய்வு நடத்த அனுமதிக்க வேண்டும் என்றார். அதை ஏற்று வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

Related Stories: