முகநூலில் பழகி கவர்ச்சிகரமாக பேசிய கர்ப்பிணி கைது: போலீஸ்காரரை வலையில் வீழ்த்தி 34 லட்சம் துணிகர மோசடி

சென்னை: சிவகங்கை மாவட்டம், காளையார்கோயில் தாலுகா, மூலக்கரை கிராமத்தை சேர்ந்தவர் பாரதிராஜா (25). இவர், திருநெல்வேலி மாவட்டம், மணிமுத்தாறில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல் படையில் போலீஸ்காரராக உள்ளார். தற்போது, இவர் கடந்த 3மாதமாக சென்னை, திருவொற்றியூரில் உள்ள கடற்படையில் பணியாற்றி வருகிறார். இதற்கிடையில், கடந்த ஜனவரி மாதம் பாரதிராஜாவின் முகநூலில் ஆவடி, ஆனந்தம் நகர், பாரதிதாசன் தெருவைச் சார்ந்த ஐஸ்வர்யா (26) என்ற இளம்பெண் நட்பாகி உள்ளார்.  பின்னர், ஐஸ்வர்யா, தான் டாக்டருக்கு படித்து வருவதாக பாரதிராஜாவிடம் கூறி பழகிவந்துள்ளார். மேலும்,  அவர் பாரதிராஜாவை திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி செல்போனில் அடிக்கடி கவர்ச்சிகரமாக பேசி வந்துள்ளார். இதன் பிறகு, ஐஸ்வர்யா  திருமணம் தொடர்பாக பூஜை செய்யவும், நகைகள் வாங்கவும் பணம் வேண்டும் என பாரதிராஜாவிடம் கூறி உள்ளார். மேலும், அவர் கடந்த 6மாதத்திற்கு முன்பு பாரதிராஜாவிடம் முதல் தவணையாக 4 லட்சம் கேட்டுள்ளார். இதனையடுத்து, பாரதிராஜா அந்த பணத்தை ஐஸ்வர்யாவின் தந்தை பழனியின் வங்கி கணக்கிற்கு பரிமாற்றம் செய்து உள்ளார்.

அதன் பிறகு, அவர் கொஞ்சம் கொஞ்சமாக 10 லட்சம் என மொத்தம் 14 லட்சம் வரை பாரதிராஜாவிடம் பணம் வாங்கி உள்ளார்.  இதற்கிடையில், ஐஸ்வரியா, எனக்கு ஒரு  தங்கை இருப்பதாக பாரதிராஜாவிடம் கூறியுள்ளார். இதனையடுத்து, பாரதிராஜா, தனது பெரியப்பா மகன் மகேந்திரன் அவருக்கு முகநூல்மூலம் அறிமுகம் செய்து வைத்துள்ளார். ஆனால், ஐஸ்வர்யாவுக்கு தங்கை என்று யாரும் கிடையாது. அவரே தான் இரு முகநூல் கணக்கு மூலமாக இருவரிடமும் மாறி மாறி பேசி ஏமாற்றி வந்துள்ளார்.  மேலும், ஐஸ்வர்யா மகேந்திரனையும் திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி உள்ளார்.  இதனை நம்பி அவரும் கடந்த 6 மாதமாக கொஞ்சம் கொஞ்சமாக 20  லட்சம் வரை வங்கி கணக்கில் பரிமாற்றம் செய்துள்ளார். மேலும், அவர் ஜஸ்வரியாவுக்கு ஒரு சவரன் தங்க சங்கிலி, ஒரு ஜோடி கொலுசு ஆகியவற்றை வாங்கி   கொரியர்  மூலம் அனுப்பி வைத்து உள்ளார். அதன் பின்பு, கடந்த ஒரு மாதமாக ஐஸ்வரியா இருவரின் தொடர்பையும் துண்டித்துள்ளார்.  இதனையடுத்து, பாரதிராஜா, மகேந்திரன் இருவரும் ஏமாற்றப்பட்டதை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து பாரதிராஜா சென்னை மாநகர கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்தார். கமிஷனர் சங்கர் ஜீவால் புகாரை ஆவடி காவல் நிலையத்திற்கு அனுப்பி விசாரணை நடத்த உத்தரவிட்டார். இதனையடுத்து, குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ஜெய்கிருஷ்ணன் தலைமையில் போலீசார் வழக்கு பதிவு செய்து உள்ளனர்.

மேலும், போலீசார் ஐஸ்வர்யா மற்றும் பெற்றோர்களை அழைத்து விசாரணை நடத்தினர். இதில், ஐஸ்வர்யா டாக்டருக்கு படிக்கவில்லை என்பதும், அவர் +2வரை படித்து உள்ளார். அவருக்கு திருமணமாகி சரண்குமார் கணவர் உள்ளார். இவர் ஆந்திர மாநிலம் நகரியில் வேளாண்மை துறையில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு 8 வயதில் ஒரு மகள் உள்ளார். மேலும், ஐஸ்வர்யா தனது அக்கா வைத்திருக்கும் ஃபேன்ஸி ஸ்டோரில் ஊழியராக பணியாற்றி வருகிறார். தற்போது, ஐஸ்வர்யா 5 மாத கர்ப்பிணியாக உள்ளார்.   இவர் தனது இரு முகநூல் கணக்குகளில் அழகான ஒரு பெண்ணின் படத்தை வைத்து பாரதிராஜா, மகேந்திரன் இருவரையும் தனது கவர்ச்சியான பேச்சால் ஆசைவார்த்தை கூறி பண மோசடி செய்துள்ளார் என்பது தெரியவந்தது.

மேலும், ஐஸ்வரியாவும் பண மோசடி செய்ததையும், அந்த பணத்தை ஆடம்பரமாகவும் செலவும் செய்ததாக போலீசாரிடம்  ஒப்புகொண்டு உள்ளார். புகாரின் அடிப்படையில் போலீசார் ஜஸ்வரியாவை நேற்று மாலை கைது செய்தனர். மேலும், போலீசார் ஐஸ்வரியா வேறு யாரிடமும் முகநூல் மூலம் பழகி பண மோசடி செய்து உள்ளாரா என தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். முகநூல் மூலம் இளம்பெண் பழகி திருமண ஆசை காட்டி கவர்ச்சிகரமாக பேசி போலீஸ்காரர், அவரது சகோதரர் ஆகியோரிடம் 34 லட்சம் பண மோசடி செய்த சம்பவம் ஆவடியில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: