வணிக வரித்துறை வாகன தணிக்கையில் ரூ.5.81 கோடி அபராதம் வசூல்

சென்னை: தமிழகத்தில் வணிகவரி நுண்ணறிவு பிரிவு அலுவலகங்கள் மூலமாக 53055 வாகனத் தணிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு தண்டத்தொகையாக ரூ.5.81 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது என வணிகவரி மற்றும் பதிவுத் துறை அரசு செயலாளர் பா. ஜோதி நிர்மலாசாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; பொது மக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்திடுவதில் வணிகவரித் துறை மூலம் பெறப்படும் வரி வருவாயானது பெரும் பங்கு வகிக்கிறது. இவ்வாறு அரசுக்கு சேர வேண்டிய வரி வருவாய் உரிய காலத்தில் பெறப்படுவதை உறுதி செய்யும் விதத்தில் இந்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

வணிகவரித் துறையின் புலனாய்வு சார்ந்த நடவடிக்கைகளை மேலும் வலுவாக்குவது, ரோந்துப் பணிக் குழுக்களைக் கொண்டு பட்டியல் இல்லாமல் செல்லும் வாகனங்களை தணிக்கை செய்யும் பணியினை திறம்பட செய்வது போன்ற புதிய பல முயற்சிகள் துறையால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன்படி 25.10.2021 முதல் 28.11.2021 வரை முடிவடைந்த ஐந்து வார காலகட்டத்தில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வணிகவரி நுண்ணறிவு பிரிவு அலுவலகங்கள் மூலமாக 53055 வாகனத் தணிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, அவற்றில் 66372 மின்னணு வழிப்பட்டியல்கள் சரிபார்க்கப்பட்டு வழிப்பட்டியல் இல்லாமல் சென்ற 1054 இனங்களில் குற்றங்கள் பதிவு செய்யப்பட்டு வரி/ தண்டத்தொகையாக ரூ.5.81 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது.

அரசுக்கு வர வேண்டிய வரி வருவாய் எவ்வித ஏய்ப்புகளும் இன்றி வசூல் செய்யப்படுவதை உறுதி செய்யும் வகையில் இத்தகைய தணிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: