கர்நாடக மாநிலத்தில் 2 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி; தமிழக எல்லைகளில் மருத்துவக் கண்காணிப்பு தீவிரம்: பொது சுகாதாரத்துறை உத்தரவு

சென்னை: கர்நாடக மாநிலத்தில் இருவருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் தமிழக எல்லைகளில் மருத்துவக் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது என்று பொது சுகாதாரத் துறை இயக்குநர் டாக்டர் செல்வ விநாயகம் தெரிவித்துள்ளார். இது குறித்து பொது சுகாதாரத் துறை இயக்குநர் டாக்டர் செல்வவிநாயகம் கூறியதாவது: கொரோனா வைரஸ் உருமாற்றமடைந்து அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் நிலையில், அதற்கு முன்னதாக நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை தமிழகம் முன்னெடுத்துவிட்டது.

பொருளாதாரத்தைக் கருத்தில் கொண்டு சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும், மாநில எல்லைகளில் மருத்துவக் கண்காணிப்பு தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் அண்டை மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு ஒமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளதால், தமிழகத்தின் அனைத்து எல்லைகளிலும் தீவிர கண்காணிப்பை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தியிருக்கிறோம். அதன்படி அறிகுறிகளுடன் தமிழகத்துக்கு வருவோரை தனிமைப்படுத்தி கொரோனா பரிசோதனைகளை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

இதைத் தவிர வழக்கமான நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து செயல்படுத்துமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் வலியுறுத்தியுள்ளோம். தமிழகத்தில் ஒமிக்ரான் தொற்று பரவிவிடுமோ என்று பொது மக்கள் அச்சப்படத் தேவையில்லை. முறையாக முகக் கவசம் அணிந்து நோய்த் தடுப்பு விதிகளை கடைப்பிடித்தால் தொற்று பரவலில் இருந்து தற்காக்க முடியும். அதனுடன் இரு தவணை கொரோனா தடுப்பூசிகளை செலுத்திக் கொள்வதன் மூலம் பாதுகாப்பை உறுதி செய்யலாம்.

ஒருவேளை ஒமிக்ரான் தொற்று ஏற்பட்டாலும் கூட அதனை எதிர்கொள்ளும் வகையிலான எதிர்ப்பாற்றல் தடுப்பூசியின் வாயிலாக கிடைக்கும். பெருந்தொற்று காலத்தில் பொது மக்கள் அரசுக்கு முழு ஒத்துழைப்பை நல்க வேண்டும். சுகாதாரத் துறை வழிகாட்டுதலின்படி மக்கள் சரியாக செயல்பட்டால் ஒமிக்ரான் மட்டுமல்ல, எந்த வகை தொற்று பரவினாலும், அதனை வெல்ல முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: