ஈஸ்ட் பெங்காலுடன் இன்று மோதல்: சென்னையின் எப்சி ஹாட்ரிக் வெற்றி பெறுமா?

கோவா: 11 அணிகள் பங்கேற்றுள்ள 8வது ஐஎஸ்எல் கால்பந்து தொடர் கோவாவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த 15வது லீக் போட்டியில் ஜாம்ஷெட்பூர்-ஐதராபாத் அணிகள் மோதின. விறுவிறுப்புடன் நடந்த இந்த போட்டியில் 41வது நிமிடத்தில் ஜாம்ஷெட்பூர் வீரர் கிரேக் ஸ்டெவார்ட் கோல் அடித்தார். இதனால் முதல் பாதியில் 1-0 என அந்த அணி முன்னிலை பெற்றது. 2வது பாதி ஆட்டத்தில் ஐதராபாத்தின் ஒக்பேச்சே 56வது நிமிடத்தில் பதில் கோல் அடித்து சமன் செய்தார். பின்னர் இறுதி வரை இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இதனால் 1-1 என போட்டி சமனில் முடிந்தது.

இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் போட்டியில் சென்னையின் எப்சி-ஈஸ்ட்பெங்கால் அணிகள் மோதுகின்றன. சென்னை முதல் போட்டியில் ஐதராபாத்தையும், 2வது போட்டியில் கவுகாத்தியையும் வீழ்த்தியது. இன்று ஹாட்ரிக் வெற்றியுடன் முதலிடத்தை பிடிக்கும் முனைப்பில் உள்ளது. ஈஸ்ட்பெங்கால் 3 போட்டியில் ஒரு டிரா, 2 தோல்வி கண்டுள்ளது. இன்று வெற்றிகணக்கை தொடங்க வேண்டிய நெருக்கடியில் களம் இறங்குகிறது. இரு அணிகளும் இதற்கு முன் 2 போட்டிகளில் மோதி உள்ளன. 2 போட்டியும் டிராவில் முடிந்துள்ளது.

Related Stories: