இன்று உலக மாற்றுத்திறனாளிகள் தினம் ஊனத்தை உதறித்தள்ளி உயர்ந்தவர்கள்-பெரம்பலூர் மாவட்டத்திற்கு பெருமை

பெரம்பலூர் : இன்று (3ம்தேதி) உலக மாற்றுத் திறனாளிகள் தினம். இத்தினதில் உயரதிகாரி, உலகம் சுற்றும் வாலிபன், உதிரம் பெற்றுத்தரும் உத்தமன். ஊனத்தை உதறித்தள்ளி உயர்ந்தவர்கள் பெரம்பலூர் மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்.ஊனமுற்றவர்களை பழித்ததால் மனதளவில் ஊனமானவர்களே அதிகமாகி உள்ளனர். உடலில் தெரிவது ஊனமல்ல. மனதிலிருப்பதே ஊனம். இவர்களுக்காகவே தான் ஊனமுற்றோர் நலத்துறை என்றிருந்த துறையை மரியாதைப்படுத்தும் விதமாக முன்னாள் முதல்வர் கருணாநிதி மாற்றுத்திறனாளிகள் நலத்துறை என மாற்றி அரசாணையை பிறப்பித்தார். இதனால் பலரும் தன்னம்பிக்கை கொண்டு வாழ்வில் முன்னேறி வருகின்றனர். அந்த வகையில் ஊனத்தை உதறித்தள்ளி உயர்ந்தவர்கள் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ளனர்.

டெபுட்டி கலெக்டர்: பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டரின் கூடுதல் நேர்முக உதவியாளராக (நிலம்) டெபுட்டி கலெக்டர் நிலையில் பணிபுரிந்துவருபவர் முனியப்பன் (46). கரூர் மாவட்டம், தாந்தோன்றி மலையை சேர்ந்த இவர், தனது ஒன்றரை வயதிலேயே போலியோ எனப்படும் இளம்பிள்ளைவாத நோயால் பாதித்து இருகால்களும் செயலிழந்தவர். கால்கள் செயலிழந்தாலும் தன்னம் பிக்கையைஇழக்காது, பள்ளி படிப்பை முடித்தவுடன் இருகைகளை ஊன்றியபடி தரையில் தவழ்ந்து சென்று பாலிடெக்னிக், டிப்ளமோ இன் கமர்ஷியல் பிராக்டீஸ் (டிசிபி), கரூர் அரசு கலைக் கல்லூரியில் பிகாம், அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் எம்.காம்., தமிழ்நாடு திறந்தவெளி பல்கலைக் கழகத்தில் எம்பிஏ படித்துள்ளார். 2001-ல் குரூப் -2 தேர்வில் தேர்ச்சி பெற்று வருவாய்த்துறையில் உதவியாளராகி பிறகு 2008ல் கரூர் கலெக்டர் அலுவலக டெபுட்டி தாசில்தார், 2014ல் கிருஷ்ணராயபுரம் ரெகுலர் தாசில்தார், 2018ல் பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் டெபுட்டி கலெக்டர் நிலையில் கலெக்டரின் கூடுதல் நேர்முக உதவியாளராகப் பணி புரிந்து வருகிறார்.

பெரம்பலூர் அரசு குடியிருப்பில் தங்கிக்கொண்டு, சரியான நேரத்திற்கு ஆட்டொ மேட்டிக் வீல்சேர் மூலம் அலுவலகத்திற்குள் ஆஜராகி விடுவார். மாற்றுத்திறனாளிகளுக்கு பதவி உயர்வில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும், அவர்களை சொந்த மாவட்டத்தில் பணிபுரியச் செய்ய வேண்டுமென்பது இவரது வேண்டுகோள். விரைவில் மாவட்ட வருவாய் அலுவலராகவுள்ள முனியப்பன், கலெக்டராகவும் வாய்ப்புள்ளது.

தடகள வீரர்: பெரம்பலூர் அருகேயுள்ள மேலப்புலியூரைச் சேர்ந்தவர் கலைச்செல்வன் (37). 10 ஆண்டுகளுக்கு முன்பு விபத்தில் இடது கையை முழுமையாக இழந்தவர், தன்னம்பிக்கையை இழக்கவில்லை.மாற்றுத்திறனாளிகளுக்கான தடகள போட்டிகளில் மாவட்ட அளவில், மண்டல அளவில், மாநில அளவில் சாதித்த கலைச்செல்வன் இந்தியால் 19 மாநிலங்களில் நடைபெற்ற தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்று தங்கம்,வெள்ளி, பதக்கங்களைப் பெற்றுள்ளார்.

2011லண்டன், இத்தா லி, பிரேசில், ஜப்பான், ஆஸ் திரேலியா நாடுகளில் நடந் த தடகள விளையாட்டுப் போட்டிகளில், ஓட்டம், நீச் சல், சைக்கிள் ஓட்டம் என உலகத்தைச் சுற்றிவந்து இதுவரை 250மெடல்களை வாங்கிக் குவித்துள்ளார். 357 விழிப்புணர்வு மாரத் தான் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். தமிழக டிஜிபி சைலேந்திர பாபு, அமுதா ஐஏஎஸ் உள்ளிட்டோரிடம் விருது பெற்றுள்ளார். கூட்டுறவுத் துறையின்கீழ் இயங்கும் பெரம்பலூர் வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க நியாயவிலைக் கடையில் கட்டுநராக வேலை பார்த்து வருகிறார்.

ரத்ததானம் பெற்றுத்தரும் உத்தமன்: பெரம்பலூர் அருகேயுள்ள கவுல்பாளையம் கிராமத்தில் பெட்டிக்கடை நடத்தி வருபவர் நாகராஜ்(34). சிறு வயதிலேயே இளம் பிள்ளைவாத நோய் பாதித்து இடது கை, வலது கால் செயலிழந்தவர். இருந்தும் தன் னம்பிக்கை இழக்காமல் தானத்தில் சிறந்த ரத்ததானத்தில் கவனம் செலுத்தத் தொடங்கினார். இதற்காக நண்பர்களையும் இணைத்து உதிரம் நண்பர்கள் குழு மூலம் 4 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்டோருக்கு உதிரம் பெற்றுக்கொடுத்து உயர்ந்து நிற்கிறார். ஊரெல்லாம் உதிரம் நாகராஜ் என்றே அழைக்கும் நிலைக்கு உயர்ந்துள்ளார். ஊனத்தை உதறித்தள்ளி உலகில் மட்டு மல்ல உள்ளத்திலும், உணர்விலும் உயர்ந்து நிற்பவர்கள் உனமில்லாதவருக்குக் கூட உதாரணமாகத் திகழ்வது சிறப்பு.

Related Stories: