ஓடை தூர்வாரப்படாததால் வயலில் மழைநீர் தேங்கி வெங்காய செடிகள் அழுகியது

நாமகிரிப்பேட்டை : நாமகிரிப்பேட்டை அருகே ஓடையை தூர் வாராததால், விளை நிலங்களில் மழைநீர் தேங்கி நிலக்கடலை மற்றும் சின்ன வெங்காய செடிகள் அழுகியுள்ளது.நாமக்கல் மாவட்டம், நாமகிரிப்பேட்டை ஒன்றியம் திம்மநாயக்கன்பட்டி ஊராட்சி எம்ஜிஆர் நகரில், சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இப்பகுதி விவசாயிகள் சுமார் 50 ஹெக்டேர் பரப்பளவில் நிலக்கடலை மற்றும் சின்ன வெங்காயம் பயிரிட்டுள்ளனர். தற்போது செடிகள் செழித்து வளர்ந்துள்ள நிலையில், கடந்த ஒரு மாதமாக நாமக்கல் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் ஏரி, குளங்களில் நீர் நிரம்பியுள்ளது. ஆறு, கால்வாய் மற்றும் ஓடைகளில் தண்ணீர் ஓடுகிறது. இப்பகுதியில் சாலை வசதி இல்லாததால் பொதுமக்கள் ஓடையை வழித்தடமாக பயன்படுத்தி வருகின்றனர்.

பல ஆண்டுகளாக ஓடையை தூர்வாராததால், அருகில் உள்ள விவசாய நிலங்களுக்குள் மழைநீர் ஊற்று எடுத்துள்ளது. வயலில் உள்ள நிலக்கடலை மற்றும் சின்ன வெங்காய செடிகள் முழுவதுமாக தண்ணீரில் மூழ்கியுள்ளது. வாரக்கணக்கில் தண்ணீர் தேங்கியுள்ளதால் பயிர்கள் அனைத்தும் அழுகி வீணாகியுள்ளது.

விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். எனவே, மழையால் சேதமடைந்த நிலக்கடலை, சின்ன வெங்காய வயலை வேளாண் அதிகாரிகள் ஆய்வு செய்து விவசாயிகளுக்கு அரசின் நிவாரணம் பெற்றுத்தரவேண்டும். மாணவர்கள், பொதுமக்கள் வசதிக்காக ஓடையை தூர்வாரி, ஓடையின் குறுக்கே பாலம் கட்டித்தர வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Related Stories: