போக்சோ சட்ட விழிப்புணர்வு கூட்டம் பள்ளிகளில் நீதிபோதனை வகுப்பு நடத்த வேண்டும்-போலீஸ் துணை கமிஷனர் பேச்சு

நெல்லை : நெல்லையில்  அரசு மற்றும் தனியார் பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்ட  போக்சோ சட்டம் குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக  உதவியாளர் டைட்டஸ் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக  மாநகர துணை கமிஷனர் சுரேஷ்குமார் பங்கேற்று பேசுகையில், நெல்லை மாநகரை பொறுத்தவரை மாணவர்களிடையே சாதிய மோதல்  காணப்படுகிறது. மாணவர்கள் போதைக்கு அடிமையாவதை தடுக்கும் நடவடிக்கை  தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

அதனை விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள்  மாணவர்களை கண்காணித்து நல்வழிப்படுத்த அனைத்து பள்ளிகளிலும் நீதிபோதனை  வகுப்புகளை நடத்த வேண்டும். பெண்கள், குழந்ைதகள் தொடர்பான புகார்களை 1098 என்ற எண்ணில் எந்த  நேரத்திலும் தெரிவிக்கலாம். புகார் தெரிவிப்பவர்களின் ரகசியம்  காக்கப்படும். போக்சோ சட்டம் குறித்து மாணவிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும், என்றார்.கூட்டத்தில் மாநகர கூடுதல் துணை கமிஷனர் சங்கர்,  டவுன் உதவி கமிஷனர் விஜயகுமார், இன்ஸ்பெக்டர்கள் ராமேஸ்வரி, முத்துலெட்சுமி  மற்றும் அரசு, தனியார் பள்ளி தலைமை ஆசிரியர்கள், முதல்வர்கள், ஆசிரியர்கள் கலந்து  கொண்டனர்.

Related Stories: