திருவண்ணாமலை மாவட்டத்தில் அமைப்புசாரா தொழிலாளர்கள் விபரங்களை பொதுசேவை மையங்களில் பதிவு செய்யலாம்-தொழிலாளர் உதவி ஆணையர் அறிவிப்பு

திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்டத்தில் அமைப்புசாரா தொழிலாளர்களின் விபரங்களை அனைத்து பொதுசேவை மையங்களிலும் இலவசமாக பதிவு செய்து கொள்ளலாம் என தொழிலாளர் உதவி ஆணையர் சீ.மீனாட்சி தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: இந்திய அரசினால் அமைப்புசாரா தொழிலாளர்களின் விபரங்களை ஒருங்கிணைக்க www.eshram.gov.in என்ற இணையதளத்தில் கட்டுமானத் தொழிலாளர்கள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட தொழிலாளர்கள், மீன்பிடித் தொழிலாளர்கள், விவசாயத்தொழிலாளர்கள், செங்கல் சூளை தொழிலாளர்கள், ரிக்ஷா வண்டி இழுப்பவர்கள், தெரு வியாபாரிகள், அங்கன்வாடி பணியாளர்கள், ஆஷா பணியாளர்கள், வீட்டு வேலை பணியாளர்கள், சுய உதவிக்குழுக்கள் மற்றும் நிரந்தர வருமானம் இல்லாத அனைத்து அமைப்புசாரா தொழிலாளர்களின் விவரங்களை அனைத்து பொது சேவை மையங்களிலும் (இ-சேவை) ஆதார் அட்டை, ஆதாரில் இணைக்கப்பட்டுள்ள மொபைல் எண், வங்கி கணக்கு புத்தகம் மற்றும் பிறந்த தேதி, பிறந்த ஊர், எந்த சமுகத்தினை சேர்ந்தவர் ஆகிய விபரங்களுடன் நேரில் சென்று இலவசமாக பதிவு செய்து கொள்ளலாம்.

மாநில அரசின் பல்வேறு வகையான நலத்திட்டங்களின்கீழ் பதிவு செய்துள்ள அனைத்து தொழிலாளர்களும் இந்த இணையத்தளத்தின் கீழ் பதிவு செய்யலாம்.

இந்த இணையதளத்தில் தொழிலாளர்கள் தங்களை பதிவு செய்து கொள்ள 16 வயது முதல் 59 வயதிற்குள் இருக்க வேண்டும். இந்த தகவல்களை பதிவேற்றம் செய்த உடன் பயனாளிகளுக்கு 12 இலக்க எண் கொண்ட அடையாள அட்டை வழங்கப்படும். இந்த தரவு தளத்தில் தன்னை இணைத்துகொள்ளும் அமைப்புசாரா தொழிலாளர்கள் ₹2 லட்சத்திற்கான விபத்துக் காப்பீடு பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: