திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்டத்தில் அமைப்புசாரா தொழிலாளர்களின் விபரங்களை அனைத்து பொதுசேவை மையங்களிலும் இலவசமாக பதிவு செய்து கொள்ளலாம் என தொழிலாளர் உதவி ஆணையர் சீ.மீனாட்சி தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: இந்திய அரசினால் அமைப்புசாரா தொழிலாளர்களின் விபரங்களை ஒருங்கிணைக்க www.eshram.gov.in என்ற இணையதளத்தில் கட்டுமானத் தொழிலாளர்கள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட தொழிலாளர்கள், மீன்பிடித் தொழிலாளர்கள், விவசாயத்தொழிலாளர்கள், செங்கல் சூளை தொழிலாளர்கள், ரிக்ஷா வண்டி இழுப்பவர்கள், தெரு வியாபாரிகள், அங்கன்வாடி பணியாளர்கள், ஆஷா பணியாளர்கள், வீட்டு வேலை பணியாளர்கள், சுய உதவிக்குழுக்கள் மற்றும் நிரந்தர வருமானம் இல்லாத அனைத்து அமைப்புசாரா தொழிலாளர்களின் விவரங்களை அனைத்து பொது சேவை மையங்களிலும் (இ-சேவை) ஆதார் அட்டை, ஆதாரில் இணைக்கப்பட்டுள்ள மொபைல் எண், வங்கி கணக்கு புத்தகம் மற்றும் பிறந்த தேதி, பிறந்த ஊர், எந்த சமுகத்தினை சேர்ந்தவர் ஆகிய விபரங்களுடன் நேரில் சென்று இலவசமாக பதிவு செய்து கொள்ளலாம்.