கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் மாநிலமொழியை பயிற்றுமொழி ஆக்கக் கோரிய மனு தள்ளுபடி

மதுரை: தூத்துக்குடி மாவட்டம், கடம்பூரைச் சேர்ந்த செல்வகுமார், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘ஒன்றிய அரசின் கீழ் செயல்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் இந்தியே பயிற்று மொழியாக உள்ளது. கீழ் தமிழகத்தில் செயல்படும் கேந்திரிய வித்யாலயா உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் தமிழை கட்டாயப் பாடமாக்கவும், பயிற்று மொழியாக்கவும், ஒன்றிய அரசின் கீழ் செயல்படும் கல்வி நிறுவனங்கள் அந்தந்த மாநில மொழியை கட்டாய பாடமாகவும், பயிற்று மொழியாக்கவும் உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார். இந்த மனு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, ஒன்றிய அரசுத் தரப்பில், ‘‘கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில், தமிழ் விருப்ப பாடமாக உள்ளது. விரும்புவோர் அதை படிக்கலாம். நாடு முழுவதும் செயல்படுவதால், அந்தந்த மாநில மொழிகளை பயிற்று மொழியாக்க முடியாது’’ என வாதிடப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள் புஷ்பா சத்யநாராயணா, வேல்முருகன் ஆகியோர் இந்த மனுவை நேற்று தள்ளுபடி செய்தனர்.

Related Stories: