சென்னை: வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த விவகாரத்தில் சிக்கிய மாசு கட்டுப்பாட்டு வாரிய முன்னாள் தலைவர் வெங்கடாசலம் தனது வீட்டில் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். முன்னாள் அமைச்சர்களுக்கு நெருக்கமான இவர், லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு பயந்து தற்கொலை செய்து கொண்டாரா அல்லது அதிமுக விஐபிக்களின் நெருக்கடி காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதியை சேர்ந்தவர் ஏ.வி.வெங்கடாசலம். இவர் கடந்த 1988ல் மாநில வனத்துறை சேவை அதிகாரியாக பணியில் சேர்ந்தார். பின்னர் பணிமூப்பு அடிப்படையில் கடந்த 1994ம் ஆண்டு ஐஎப்எஸ் அதிகாரியாக பதவி உயர்வு பெற்றார். பிறகு மாநில வனத்துறையில் பல்வேறு நிலைகளில் தமிழகம் முழுவதும் பணியாற்றி கடந்த 2018 செப்டம்பர் மாதம் வெங்கடாசலம் பணியில் இருந்து ஓய்வு பெற்றார்.
பணியில் இருக்கும் போது அதிமுக அரசின் அமைச்சர்களுடன் மிகவும் நெருக்கமாக இருந்ததால், அதற்கு பரிசாக ஓய்வு பெற்ற நிலையில் வெங்கடாசலம் கடந்த 2019ல் மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவராக நியமிக்கப்பட்டார். அதைதொடர்ந்து, வெங்கடாசலம் 2 ஆண்டாக மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவராக பதவி வகித்தார். தனது பதவிக்காலத்தில் வெங்கடாச்சலம் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி முறைகேட்டில் ஈடுபட்டதாகவும், அதேபோல், கடந்த 2019ம் ஆண்டு தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தில் உதவியாளர் மற்றும் தட்டச்சர் போன்ற பதவிகளுக்கு தகுதி இல்லாத நபர்களை பணம் பெற்றுக் கொண்டு பணியில் சேர்த்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, வெங்கடாசலம் மீது லஞ்ச ஒழிப்புத்துறைக்கு பல்வேறு தரப்பில் இருந்து புகார்கள் குவிந்தது. அதன் அடிப்படையில் வெங்கடாசலம் மீது சென்னை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அதைத்தொடர்ந்து கடந்த செப்டம்பர் 23ம் தேதி மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவராக பணியில் இருந்து ஓய்வு பெறும் நாளில் வெங்கடாசலத்திற்கு சொந்தமான வேளச்சேரியில் உள்ள வீடு, சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே அம்மாப்பளையத்தில் உள்ள வீடு, கிண்டியில் உள்ள மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைமை அலுவலகம் என 5 இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர். இரண்டு நாட்கள் நடந்த சோதனையில் வீடுகள் மற்றும் அலுவலகத்தில் இருந்து கணக்கில் வராத 13.50 லட்சம் ரொக்க பணம், 11 கிலோ தங்கம், 15.25 கிலோ சந்தன மரம் மற்றும் சந்தன மரத்தால் ஆன 2 ேதவி சிற்பங்கள், 4 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் பல கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.