சென்னை: ஒமிக்ரான் வைரஸ் தொற்று பாதிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகளில் 275 படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். கொரோனாவில் இருந்து உருமாற்றமடைந்த ஒமிக்ரான் வைரஸ் தொற்று தென் ஆப்பிரிக்காவில் தோன்றி பிற நாடுகளிலும் பரவி வருகிறது. புதிதாக உருவெடுத்துள்ள ஒமிக்ரான் வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. வழக்கமான கொரோனா தொற்றைக் காட்டிலும் 5 மடங்கு வேகமாக பரவக் கூடியதாகவும், வீரியமிக்கதாகவும் ஒமிக்ரான் வைரஸ் கருதப்படுகிறது. இதனால் இந்தியா மற்றும் தமிழகத்திலும் தொற்று பாதிப்பு பரவாமல் தடுப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன.
வெளிநாடுகளில் இருந்து வருவோரை விமான நிலையத்திலேயே பரிசோதித்து தனிமைப்படுத்தும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மற்றொருபுறம் மாநிலத்துக்குள்ளும் மருத்துவக் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஒமிக்ரானை எதிர்கொள்ள தேவையாக இருக்கும் முக்கிய மருந்துகள், ஆக்சிஜன் வசதிகள், முகக்கவசங்கள் போன்றவை அடுத்த 3 மாதங்களுக்கு தேவையான அளவு கையிருப்பு உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் தமிழகத்தில் ஒமிக்ரான் வைரஸ் தொற்று பரவினால் அதனை எதிர்கொள்ள பல்வேறு கட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.