சென்னை: கொரோனா தடுப்பூசி போட்டவர்களுக்கு, ஒமிக்ரான் போன்ற வைரஸ் பாதிப்பு ஏற்பட்டாலும் உயிரிழப்பை தடுக்க முடியும் என்று பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் கூறினார். இதுகுறித்து செல்வவிநாயகம் கூறியதாவது: தமிழகத்தில் 5 கோடியே 78 லட்சத்து 91 ஆயிரம் பேர் 18 வயதை பூர்த்தி செய்து கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள தகுதியானவர்களாக உள்ளனர். அவர்களில் கடந்த 30ம் தேதி வரை 4 கோடியே 54 லட்சத்து 89 ஆயிரத்து 382 பேர் முதல் தவணை தடுப்பூசி போட்டுள்ளனர். 2 கோடியே 56 லட்சத்து 13 ஆயிரத்து 525 பேர் இரண்டாம் தவணை தடுப்பூசி போட்டு கொண்டனர்.
மேலும் 1 கோடியே 24 லட்சத்து 1,618 பேர் முதல் தவணை தடுப்பூசியும், 80 லட்சத்து 50 ஆயிரத்து 574 பேர் இரண்டாம் தவணை தடுப்பூசியும் போட்டு கொள்ளாமல் உள்ளனர். தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்குஒமிக்ரான் போன்ற உருமாறிய கொரோனா பாதிப்பு ஏற்பட்டாலும் தடுப்பூசி போட்டிருந்தால் உயிரிழப்பு ஏற்படுவதை தடுக்கலாம். எனவே ஒமிக்ரான் போன்ற எந்தவித பாதிப்புகளில் இருந்தும் தங்களையும், குடும்பத்தினரையும் பாதுகாத்துக்கொள்ள 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். முகக்கவசம் அணிய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.