கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் அதிக கவனம் செலுத்தி மாற்றுத்திறனாளிகளின் வாழ்வு செழிக்க தமிழக அரசு முனைப்புடன் செயல்படும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து செய்தி

சென்னை: மாற்றுத்திறனாளிகளின் வாழ்வு செழிக்க தமிழக அரசு முனைப்புடன் செயல்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.  முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின வாழ்த்துச் செய்தி: தமிழ்நாடு அரசு மாற்றுத்திறனாளிகள் நலனில் பெரிதும் அக்கறை கொண்டு, அவர்கள் முன்னேற்றத்திற்கு தனியாக துறையை உருவாக்கி, நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.  கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் தங்களது தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளும் பொருட்டு, அவர்களுக்கு வழங்கப்படும் பராமரிப்பு தொகையான மாதம் 1,500ஐ, காத்திருப்போர் பட்டியலில் உள்ள 9,173 தகுதியுள்ள அனைத்து நபர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளி மற்றும் அவருடன் செல்லும் ஒரு உதவியாளர் தமிழ்நாடு அரசின் போக்குவரத்து கழகங்களால் இயக்கப்படும் சாதாரண பேருந்துகளில் கட்டணமில்லா பயணம் மேற்கொள்ள அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

மேலும், மாற்றுத்திறனாளிகளின் நலனுக்கென நமது நாட்டில் மட்டுமின்றி, உலகிலேயே முன்மாதிரி திட்டமாக “RIGHTS” என்ற திட்டத்தை 1,709 கோடி செலவில் திட்டமிடப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பான சேவை வழங்கியமைக்காக தமிழ்நாடு முதல் மாநிலமாக தேர்வு செய்யப்பட்டு குடியரசு தலைவரால், சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினமான 3.12.2021 அன்று தமிழ்நாடு அரசுக்கு விருது வழங்கப்படவுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கு மறுவாழ்வு வழங்கிய வகையில் இந்தியாவிலேயே சேலம் மாவட்டம் சிறந்த மாவட்டமாக தேர்வு செய்யப்பட்டு குடியரசு தலைவரால் விருது வழங்கப்படவுள்ளது. இந்திய அளவில் தமிழ்நாட்டை சேர்ந்த 6 மாற்றுத்திறனாளிகள் சிறப்பாக செயல்புரிந்தமைக்காக குடியரசு தலைவரிடம் இருந்து விருது பெறுகின்றனர். மாற்றுத்திறனாளிகளின் உயர்வினை மேம்படுத்தும் வகையில், அவர்களது கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் அதிகம் கவனம் செலுத்தி பல்வேறு  நலத்திட்டங்களை முன்னெடுத்து அவர்களின் வாழ்வு செழிக்க இந்த அரசு முனைப்புடன் செயல்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: