சென்னை: அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தில், திட்டப்பணிகள் தொடங்குவதற்கு முன்னதாக பயனாளிகளை நேரில் சந்தித்து கருத்துகள் பெறப்படும் என்று நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது. தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய தலைமை அலுவலகத்தில், இந்த வாரியத்துடன் சென்னை சமூக பணி கல்லூரி, சென்னை கிறிஸ்துவ கல்லூரி ஆகியவற்றுடன் சமூக தணிக்கை செய்ய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேலாண்மை இயக்குநர் கோவிந்த ராவ் முன்னிலையில் நேற்று கையெழுத்தானது.
அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் திட்டப்பணிகள் தொடங்குவதற்கு முன்னதாகவே பயனாளிகளை நேரில் சந்தித்து அவர்களின் கருத்துகளை பெற வேண்டும். திட்டம் குறித்த செயல்பாடுகளை பயனாளிகளிடம் எடுத்துரைக்க வேண்டும். பயனாளிகளின் பங்கை உணர்த்த வேண்டும். வெளிப்பட தன்மை மற்றும் தரக் கண்காணிப்பு, திட்டத்தை பற்றிய அனைத்து தகவல்களை பயனாளிகளுக்கு தெரிவிக்க வேண்டும். கட்டுமான பணிகளை பயனாளிகள் பார்வையிட செய்ய வேண்டும். இது போன்ற இதர அம்சங்கள் குறித்து சமூக தணிக்கை மேற்கொள்ளப்படும்.