சமூகநீதி போர்க்களத்தின் சளைக்காத போராளி: கி.வீரமணிக்கு முதல்வர் நேரில் பிறந்தநாள் வாழ்த்து

சென்னை: சமூகநீதிப் போர்க்களத்தின் சளைக்காத போராளி என கி.வீரமணியின் 89வது பிறந்தநாளை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியின் 89ம் பிறந்தநாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நேற்று காலை கி.வீரமணியின் இல்லத்திற்கு நேரில் சென்று  பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

அப்போது, அமைச்சர்கள்  துரைமுருகன், கே.என்.நேரு, எ.வ.வேலு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்,  திராவிடர் கழக பொதுச்செயலாளர் அன்புராஜ், கி.வீரமணியின் துணைவியார்  வீ.மோகனாம்மாள் ஆகியோர் உடனிருந்தனர்.  இதை தொடர்ந்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள பிறந்தநாள் வாழ்த்துச் செய்தி: பெரியார் எனும் பெரும் பல்கலைக்கழகத்தில் நேரடியாகப் பயின்ற மாணவர். பகுத்தறிவு - சுயமரியாதைப் பாடங்களை தெளிவாகப் பயிற்றுவிக்கும் ஆசிரியர். சமூகநீதிப் போர்க்களத்தின் சளைக்காத போராளி. கலைஞரின் கொள்கை இளவல். நெருக்கடி நிலைக் காலத்து சித்ரவதைகளில் என்னை தாங்கிப் பிடித்த சக சிறைவாசி. எந்த நெருக்கடியிலும் தெளிவான கொள்கை வழிகாட்டிடும் திராவிடப் பேரொளி. 11 வயதில் கைகளில் ஏந்திய லட்சியக் கொடியை 89ம் அகவையிலும் உறுதியாகப் பிடித்து, வருங்கால தலைமுறையினரிடம் பெரியாரைப் பரப்பும் பெருந்தொண்டர். தாய்க் கழகமாம் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அய்யாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். நூறாண்டுகள் கடந்து நலமுடன் வாழ்க. தொண்டறம் தொடர்ந்திடுக. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Related Stories: