மழையால் சேதமடைந்த சாலைகளை சீரமைக்க ஒன்றிய அரசிடம் 1,444 கோடி கோரப்பட்டுள்ளது: அமைச்சர் எ.வ.வேலு பேட்டி

சென்னை:  புழல் ஏரி உபரிநீர் கால்வாய் செல்லும் பகுதிகளில் பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் ஏ.வ.வேலு சென்னை வட கிழக்கு மாவட்ட செயலாளர் மாதவரம் சுதர்சனம் எம்எல்ஏ மற்றும் அதிகாரிகளுடன் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.பின்னர், மணலி புதுநகரில் பாதுகாப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் எ.வ.வேலு வழங்கினார். அவர் கூறியதாவது: புழல் ஏரியில் இருந்து வெளியேறிய உபரிநீர் செங்குன்றம் - மாதவரம் சாலையை சேதப்படுத்தியுள்ளது. இதனை சீரமைக்க 12.07 கோடி மதிப்பில் பணிகள் தொடங்கப்பட உள்ளது. தமிழ்நாட்டில் கன்னியாகுமரி முதல் சென்னை வரை அனைத்து இடங்களிலும் சாலைகள் சேதமடைந்துள்ளன. அதிகபட்சமாக கன்னியாகுமரியில் 48 இடங்களில் சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளது. ஒன்றிய அரசிடம் சாலை சீரமைப்பு பணிகளுக்காக மட்டுமே 1,444 கோடி நிதி கோரப்பட்டுள்ளது.  இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: